பயந்தேன் ..தெளிந்தேன் ..
நரிகள் ஊளையிட ,
நடுச் சாமத்தில்,
உடுக்கையடித்து,
நடு நடுங்க வைக்கும்,
குடு குடுப்பைக்காரன்.
இரவில் மரமும், நிழலும்
பெரும் பேயாய், பூதமாய்
காற்றின் அசைவில்,
கேட்ட கதை நிசமின்னு
கலக்கிடும், இன்னமும் என்னை.
எதிரிகளை பிரும்மாண்டமாய்,
எப்போதும் கற்பனை செய்து,
எண்ணங்கள் அச்சத்தில்,
என்னை முடக்கியபோது ,
செயலிழக்கச்
செய்த பயம்.
புரிதல் இல்லை,ஆதலின்
தெளிதல் இல்லை.
புரிந்துணரும், முயற்சிக்கு
வழி தெரியா தென்னை
வாட்டுவித்த பெரும் பயம்.
பயந்தேன். பயம் தெளிய
உபாயம் தெளிந்தேன் .
பயம் எனைக்கண்டு, பயப்பட
நிழலெல்லாம்,
நிசமில்லை என,
நான் தெளிந்தேன்.
இமை மூடின்,
இருட்டாகும்,வெளிச்சம்.
இழப்பதற்கு,
உயிர் தவிர
இனி ஏதும் இல்லை,
என்றதும்
இற்றுப் போனது, பயம்
அற்றுப் போனது, இப்போது.
