விவசாயி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவசாயி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 பிப்ரவரி, 2011

கொய்தலும்..நெய்தலும்.. இன்றி .


கொய்தலும்..நெய்தலும்.. இன்றி . 


 











கரிசல் மண் வயலில் 
கருவேல மர வரப்பில் 
வெற்றுடம்பு விவசாயி
இற்றுப் போன வேட்டியுடன்.

வெள்ளைப்  பந்துகளாய்
வெடித்த பருத்திகள்
வீசும் காற்றில் 
விதவைக் கோலத்தில்.

தறிக்குப் போகாமல் 
தறி கெட்டுப் பறக்கும்.

கொய்யாத பருத்தி,இன்று  
கொலைகாரன் ஆயிற்று.



கடன் தந்த நெருக்கலில் 
கழுத்திலிட்ட சுருக்கால்.   


நன்றி :கூகுள் படங்கள்          

வெள்ளி, 31 டிசம்பர், 2010

எதிர் பார்ப்புக்கள் ...

எதிர் பார்ப்புக்கள் ...
 
பாத்தியில்
புழுக்களை 
கொத்தித் தின்ன 
காத்திருக்கும் 
கொக்குகள் சாட்சியாய் ...
 
விவசாயி 
விதைக்கிறான் ..
விளைவிக்க ..
விளையுமா ?.
விளைந்தாலும்
விலை போகுமா?. 

ஞாயிறு, 28 நவம்பர், 2010

அப்பாவிடமிருந்து அனுபவப் பாடம்..(2 )

அப்பாவிடமிருந்து அனுபவப் பாடம் ..(2 )


வேலைத் தளையில் ஆளைக் கலைக்காதே !

என் தந்தையார் கடுமையான உழைப்பாளி. 1960-ம் ஆண்டு வாக்கிலேயே விவசாயம் செய்ய ட்ராக்டர் (Tractor) போன்ற நவீன கருவிகளையும், மின்சார இணைப்புகள் இல்லாத  நிலையில், பாசனத்திற்காக டீசலில் இயங்கும் இறவை என்ஜின்களையும் பயன் படுத்தியவர்.முன்னோடியான ஒரு  விவசாயி.மேடான, பல தரிசு நிலங்களை,புல்டோசர் கொண்டு சமன் செய்து, விளைநிலமாக  மாற்றியவர்.

பல சமயங்களில், இவ்வாறான பணிகளின்  போது கருவிகள் பழுது அடைதலும் , நிலத்தடி நீர் கிடைக்க ஆழ்குழாய் துளைகள் இடும்போழுதும், வேலைகள் நீண்டு இரவாகி விடும் முன்னேற்பாட்டுடன் பெட்ரோமாக்ஸ்,  லாந்தர் விளக்குகள் பணியாளர் அனைவருக்கும் உணவு, சிற்றுண்டி,  தேநீர் என  கலகலப்பாய், எந்தத் தொய்வும் இன்றி ,எவ்வளவு நேரம் ஆனாலும் வேலைகள், முடியும் வரை தொடரும்.அனைவரின் உருப்படியான யோசனைகளையும் அங்கீகரிக்கப் பட்டு,செயல் நடக்கும். வேலையின் முடிவில் அனைவருக்கும் தகுந்த சன்மானமும்,தேவையான ஓய்வும் கிடைக்கும்.






இந்த வேலைகளுக்கிடையே  துருப்பிடித்த பாகங்களை, நெருப்பில் இட்டு கழற்றுதலும் ,வழுக்கி விழும் சங்கிலிப் பிடிப்பன்களில் (Chain Wrench) மணல் தூவி இறுக்குவதும், என சின்னச் சின்ன வேலை உத்திகள். மாற்றுச் சிந்தனைகள். அரங்கேறும் 

 தந்தையாரின் தாரக மந்திரம் "வேலைத் தளையில் ஆளைக் கலைக்காதே", என்பதே.   

வெளியூரிலிருந்து வந்த வேலை ஆட்கள், வாடகைக் கருவிகள்,  தளவாட  சாமான்கள்  என அனைத்தையும் திரும்பவும் திரட்டி வேலை தொடர்வது , பெரும் காலம் பொருள் விரயம் என்பார். என் தந்தையிடமிருந்து' முன்கூட்டி திட்டமிடல்' , ' இணைந்து செயல்படல்', 'வேலை இடத்தில்  இணக்கமான சூழ்நிலை', மாற்றுச் சிந்தனைகள்',என்னும் வாழ்க்கைப் பாடம்  பயின்றேன்.

சிறு வயதில் நான் கற்ற இப்பாடங்கள், பொறியாளனாய் சிறந்த முறையில்  இங்கும் ,வெளிநாட்டிலும் பணிபுரிய,எனக்கு உதவியது என்றால் மிகையில்லை.

நன்றி : கூகுள் படங்கள் .