செவ்வாய், 30 நவம்பர், 2010

என்று தணியும் என் தாகம் ...

என்று தணியும் என் தாகம் ...
















நிசாமாதானுங்க !
நிலத்தடி நீரு,
வேருக்குக் கிழே
வெகு ஆழம் போச்சுது.

கடல் நீரும்   
கன தூரம் கசிஞ்சு, 
ஊருக்கு உள்ளே, 
உட்புகலாச்சுது.

ஆறு, குளத்துலே 
அமில அழுக்கும், 
கழிவு நீரும் கலந்து, 
கூவம் போல ஆச்சுது.

கொட்டலை 
குழாயிலே 
சொட்டு சொட்டா
சொட்டுது நீரு.

ஏங்கி நிக்கிறேன் 
எக்கி எக்கிப்  பார்க்கிறேன்.
என்று தணியும் 
என் ...தாகம்....                 

பின்னிரவு பணிப் பயணம்..

 பின்னிரவு பணிப் பயணம்..

  இப்போதும் மணி எட்டுதான்




ஆதவன் மறைந்து பூமித் தாய் மீது இருட்டுப் போர்வை.இந்திய நேரம் பத்தரை.இரவுப் பணிக்கான பயணம்.கம்பளிக்கோட்டு, குல்லாய், கண்ணாடி, குறிப்புப் புத்தகங்கள். கனத்த காலணி, கறுத்த இருட்டில், மூச்சு வாங்க நடை.குறுக்கு வழியில், திட்டி வாசல் திறந்து, நிலையத்தில் நுழைவு.அடிக்கும் மணி எட்டு,

இங்கே. ஆரவாரமாய் சப்த ஸ்வரங்களாய்,ஏழு ஒலிகளும் இரட்டை ஒளியும்.நான்கு கண்களும், பதினான்கு காதுகளும் வேண்டும். இருக்கும் இரு கண் கொண்டு, இடை யிடையே கண் காணிப்பு. வண்ணமயமாய், மாயா ஜாலமாய், நட்சத்திரங்களாய் மின்னி, அலை வரிசைக்கு ஏற்றார் போல், நர்த்தனமாடி, அளவைக் கருவிகளில், அசையும் முட்கள்.

துருவப் பிராணிகள் போல சதா குளிரிலேயே (Air Condition) வேலை செய்யும் கருவிகள். சயாமீஸ் இரட்டையராய், எப்போதும் தயாராய். சங்கடமானால் சகோதரனை உசுப்பி விட்டு, சங்கேதம் கொடுக்கும், ஒலி, ஒளி பரப்பிகள். இந்த இடைவெளியில், நோயுற்ற கருவியின், பிணி போக்க வேண்டும்.

கண்கொத்திப் பாம்பாய் எப்போதும் தயாராய்,ஜெனரேட்டர்கள். ராட்சத சத்தமிட்டு, நொடியில் துவங்கி ,நிலையத்தின் நின்று போன  இதயத்தை இயக்கம் .குழப்பமாய் ஒலிகள், கலவையாய்.  இடையே இங்கும், அங்கும், நடை. ஒளிகளில் அலை பாயும் பார்வை, கனக்கும் இமைகள்,கண் மூட இயலா. கனத்த புத்தகங்களில் கண்கள் நிலையாய், கருத்து ஒன்றுதல் கடினம்.

அப்படியும், இப்படியுமாய் நிசி கழிந்து, சாமம் துவங்கும். அரேபியக் கோழிகள், கட்டியம் கூற, அடியேன் கூட்டை நோக்கி. கைச் சாவியால் திட்டி வாசல் திறந்து, திரும்பும் பயணம்.முகம் தவிர, முக்காடிட்ட கோலம். இனம் காண இயலா, இருட்டு. பக்கத்தில் சில புதர்கள். இருட்டும் நிழலும், என்  இளம் பிள்ளைப் பயங்கள். இப்போதும் கூடத் தான். ஆயின் வெளிக்காட்ட இயலா. கன்னத்தில் தொடும்  காற்றில்   கனிவு. குளிரும் அதிகம் தான். பைய நடந்து,  இருட்டிலே உடை களைந்து, கச்சிதமாய் கம்பளிக்குள் அடக்கம். எழுகிறேன். இப்போதும் மணி எட்டு  தான்.

ஆனால், வேளையோ காலை.


( அல் பாஹா தொலைக் காட்சி நிலையத்தில், பின்னிரவில் பணிக்கு சென்றது பற்றி, கடந்த காலத்தில் வேண்டாம்...அன்புடன் )

என்றும் சேராத இணைகோடுகள் !


என்றும் சேராத இணைகோடுகள் !




அலையும் கூந்தல் 
அழகிய கண்கள் 
ஓடியும் இடை 
ஓவியத் தோற்றம்.
பூனை நடையில் 
பூவுலக அழகி 
பளிங்குச் சிலையாய்
பந்தலிட்ட மேடையில்.











அடைந்த கண்கள்
உடைந்த பற்கள் 
ஒட்டிய வயிறு
ஒல்லியான தேகம் 
ஒரு சாண் துணி 
முட்டிக் கால் 
தட்டும் நடை 
பரட்டைத் தலை 
பந்தல்காரன் 
கந்தலுடன் கீழே .        






நன்றி :கூகுள் படங்கள் 

சற்றே சிந்திக்க....

சற்றே சிந்திக்க....

பிரவேசம் மறுக்கப் பட்டவன் கட்டிய கர்பகிரகம்.





ஏசி   எட்டி  உதைத்து,   குடித்து 
வாந்தி எடுத்ததை தன் கையில்
 ஏந்தி,  முந்தானையால் அவன்
 வாய்  துடைக்கும்  மனைவி.



தாசி எனக் காறி உமிழ்ந்து, தனக்கு குடிக்க காசு கேட்கும், கயவன் கணவன்.

எப்போதோ ஆழ் கடலில் மீன் பிடிக்க சென்றவன் திரும்ப ,என்றும் அகக் கடலில் அலையின்றி காத்திருக்கும் அல்லி.

காதல் தோல்விகளால் தாடி வளர்த்து சாமியாராகிப் போனான்.கன்னிகள் இப்போது அவன் காலடியில்.

சாப்பிட்ட கோழி வயிற்றில் கொக்கரித்ததால்,விடிந்ததென்று வெளியே போனான்.

லேட் ஆயிடுச்சு வர்றட்டா...                 

பணம் படுத்தும் பாடு....

பணம் படுத்தும் பாடு..
..
















 
பணம் பண்ண,
பரதேசம் போனவன், 
பண்ணாமலே 
பிணமானான்.
பிணம்  எரிக்க, 
பணம் நிறைய, 
பிடுங்கினர்
பாடு படாமலே 
இடுகாட்டில்.
பாவம்
பிணம்.     

திங்கள், 29 நவம்பர், 2010

உழைப்பு ..ஒன்றும்.. ஒன்றும் பதினொன்று

உழைப்பு ..ஒன்றும் ஒன்றும் பதினொன்று
















 
உழைப்பில்
நீ........ஒன்று.
நான் ..ஒன்று.
ஒன்றாய்...
நாம் இணைந்தால்,
நம் பலம்
பதினொன்று.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

அப்பாவிடமிருந்து அனுபவப் பாடம்..(2 )

அப்பாவிடமிருந்து அனுபவப் பாடம் ..(2 )


வேலைத் தளையில் ஆளைக் கலைக்காதே !

என் தந்தையார் கடுமையான உழைப்பாளி. 1960-ம் ஆண்டு வாக்கிலேயே விவசாயம் செய்ய ட்ராக்டர் (Tractor) போன்ற நவீன கருவிகளையும், மின்சார இணைப்புகள் இல்லாத  நிலையில், பாசனத்திற்காக டீசலில் இயங்கும் இறவை என்ஜின்களையும் பயன் படுத்தியவர்.முன்னோடியான ஒரு  விவசாயி.மேடான, பல தரிசு நிலங்களை,புல்டோசர் கொண்டு சமன் செய்து, விளைநிலமாக  மாற்றியவர்.

பல சமயங்களில், இவ்வாறான பணிகளின்  போது கருவிகள் பழுது அடைதலும் , நிலத்தடி நீர் கிடைக்க ஆழ்குழாய் துளைகள் இடும்போழுதும், வேலைகள் நீண்டு இரவாகி விடும் முன்னேற்பாட்டுடன் பெட்ரோமாக்ஸ்,  லாந்தர் விளக்குகள் பணியாளர் அனைவருக்கும் உணவு, சிற்றுண்டி,  தேநீர் என  கலகலப்பாய், எந்தத் தொய்வும் இன்றி ,எவ்வளவு நேரம் ஆனாலும் வேலைகள், முடியும் வரை தொடரும்.அனைவரின் உருப்படியான யோசனைகளையும் அங்கீகரிக்கப் பட்டு,செயல் நடக்கும். வேலையின் முடிவில் அனைவருக்கும் தகுந்த சன்மானமும்,தேவையான ஓய்வும் கிடைக்கும்.






இந்த வேலைகளுக்கிடையே  துருப்பிடித்த பாகங்களை, நெருப்பில் இட்டு கழற்றுதலும் ,வழுக்கி விழும் சங்கிலிப் பிடிப்பன்களில் (Chain Wrench) மணல் தூவி இறுக்குவதும், என சின்னச் சின்ன வேலை உத்திகள். மாற்றுச் சிந்தனைகள். அரங்கேறும் 

 தந்தையாரின் தாரக மந்திரம் "வேலைத் தளையில் ஆளைக் கலைக்காதே", என்பதே.   

வெளியூரிலிருந்து வந்த வேலை ஆட்கள், வாடகைக் கருவிகள்,  தளவாட  சாமான்கள்  என அனைத்தையும் திரும்பவும் திரட்டி வேலை தொடர்வது , பெரும் காலம் பொருள் விரயம் என்பார். என் தந்தையிடமிருந்து' முன்கூட்டி திட்டமிடல்' , ' இணைந்து செயல்படல்', 'வேலை இடத்தில்  இணக்கமான சூழ்நிலை', மாற்றுச் சிந்தனைகள்',என்னும் வாழ்க்கைப் பாடம்  பயின்றேன்.

சிறு வயதில் நான் கற்ற இப்பாடங்கள், பொறியாளனாய் சிறந்த முறையில்  இங்கும் ,வெளிநாட்டிலும் பணிபுரிய,எனக்கு உதவியது என்றால் மிகையில்லை.

நன்றி : கூகுள் படங்கள் .

சனி, 27 நவம்பர், 2010

வயசான வாலிப சிந்தனை....

வயசான வாலிப சிந்தனை ..

குத்தாட்டம் புடிக்குது, 
குந்தித்தான் பாக்க முடியல, 
குழந்தை குட்டியோட,
கூடிப் பார்க்க, பெரும்  
குழப்பமாயிருக்குது.

கண்டபடி கட்டிபுடி, வைத்தியம் 
கமல் தான் சொன்னாரு.
கட்டிகிட்ட பொண்டாட்டி 
கற்காலக்காரி,கலிகாலம் இல்லே.
கடல் தாண்டுனா,இது  சாத்தியம்.

முத்தக் காட்சிக்கு, சும்மாவேணும்  
முகம் சுளிக்க வேண்டியிருக்கு.
வயசு ஆனதாலே, மனசு
வாலிப சிந்தனை, இந்த வயசிலே
வேண்டாமின்னு.இடிக்குது.
     
நாயம் சொல்லுங்க பெருசுகளே. 
நாமெல்லாம் என்ன செய்யறது.
( என்னைப்போல் வயதான என் நண்பரின் புலம்பல்..)                

அப்பாவிடமிருந்து அனுபவப் பாடம்... (1)..



அப்பாவிடமிருந்து அனுபவப் பாடம்...(1)..

முதல் மரியாதை.

கிராமத்து நிலக்கிழார்,மணியக்காரர்,ஒப்பந்தக்காரர் என, பல அவதாரம் தரித்தவர்.என் தந்தை.தந்தையை "அய்யா என விளிப்பது எங்கள் வழக்கம்.ஏழு பிள்ளைகளில் இடையில் பிறந்தவன் நான். இது தவிர, எங்கள் பெரியப்பா பிள்ளைகள் சிலரும், எங்கள் வீட்டில் தங்கிப் படித்தனர். சகோதர, சகோதரிகள்,உறவினர் என, வீட்டில் எப்போதும் கூட்டம். கல கலப்பு.எங்கள் நெருங்கிய உறவினர் ஒருவர்,அண்ணன் முறை வேண்டும்.எங்கள் நிலங்களை  பார்க்கும்  கண்காணியாக இருந்தார்.காலையில் ஆட்களுக்கு இடவேண்டிய பணிபற்றிய  விவரம், என் தந்தையிடம் கேட்டு விட்டு, படியிறங்கிச் சென்றார்.என்னுடைய தந்தை மீண்டும் சில வேலைகளை, அவரிடம் சொல்வதற்காக  என்னை பார்த்து  "கேசவனைக் கூப்பிடு "'என்றார். நான் உடனே தெருவில் இறங்கி "கேசவா! கேசவா !", "அய்யா கூப்பிடறாங்க",என்றேன்,உரத்த குரலில்.

பளீரென்று முதுகில் ஓர் அடி.பொறி கலங்கிப் போயிற்று. திரும்பிப் பார்த்தால் கோபமாய் என் தந்தை. அவருக்கு என்ன வயது ?.அண்ணன் முறை. இப்படி விளிக்கலாமா? என்று.
சுமார் எட்டு வயதிருக்கும் எனக்கு அப்போது.

அன்றையில் இருந்து ,எந்த நிலையிலும் ,எக்காரணம் கொண்டும்  யாரையும் மரியாதையின்றி பேசுதல், நடத்துதல்  தவறு என்பது நான் உணர்ந்த பாடம். என் முதுகில் விழுந்த, என் தந்தையின் முதல் அடி, கற்றுத்  தந்த  பாடம்.

நன்றி :கூகுள் படங்கள்.                     

வியாழன், 25 நவம்பர், 2010

மனமென்னும் மாயக் குகையில் ...

மனமென்னும் மாயக் குகையில் ...

கருப்புக் கட்டமிட்ட, கம்பிச் சன்னல்களுக்கு வெளியே பாதாம் மர  இலைகள் பச்சையும், பழுப்புமாய் காலைக் காற்றில் அசைய, சாய்ந்து தொங்குகின்ற தென்னை மர ஓலைகள் சல சலக்க,  கப்பும் கிளை யுமாய் மாமரத்தின் இலைகள், இவற்றின் ஊடே கண்ணாமூச்சி ஆடி, எட்டிப் பார்க்கின்ற கதிரோனின் கதிர்கள்.கருவுற்ற கார்மேகம் கலைந்து, பிரசவித்த பெரு மழையில், புது ஆடை அணிந்தது போல் பூமி.

சாய்வு நாற்காலியில் சற்றே நான் கண்ணயர,மனத் தூளியில் உறங்குகின்ற நினைவு சிணுங்குகிறது."கிட்ட வா", "எட்டிப் பார்", தாலாட்டு", "என்னைத் தொட்டுத் தூக்கு", என.

நினைவலைகள் காலமெனும், கடலில் பின்னோக்கி தவழ்ந்து, மெள்ளவே ஆழ்கடலில்அமைதியாய். உள்நோக்கி, மன மென்னும் குகையில்,அதன் நீண்டு அடர்ந்த பாதையில், புதைந்த பல நினைவுகள்.நல்லதும், பொல்லாததும், அல்லாததும், பிறர்  அறியாததும் என, துணியின்றி  அலைகின்ற  சில நிர்வாண  உண்மை கள். துணிவின்றி, வெளியில் சொல்ல இயலா நினைவுகள். அச்சங்கள், அடிபட்ட காயங்கள், அவற்றின்  வடுக்கள், ஆழ் மனதில் தறி கெட்டு தாறு மாறாய். புதைந்த புதையல் போல் தோண்டிப் பார்க்க ஆவலும்,அச்சமுமாய்.

வெளியுலக கோட்பாட்டின் வேஷங்களை வெறுத்து,வெளிப்படுத்த விரும்பா, விவரிக்க இயலா உணர்வுகள். உண்மை களை தோல் உரித்துப் பார்த்து,அவற்றின் விகாரங்களில் வெம்புகிற மனசு. இருட் குகையில் பூட்டிய எண்ணற்ற அறைகள். இரவில்,கனவில் இவற்றின் கதவுகள் திறந்து கொள்கின்றனவோ, என்ற அச்சம். காலச் சுவட்டின் அடிகளில் பட்ட வீழ்ச்சிகளும்,எழுச்சிகளும், இடையே எண்ணற்ற வெற்றிடங்களும்.

பழ மரத்தில் வௌவால் போல் ,ஒலி கேட்டவுடன்  பறந்து மன அலைகளை எழுப்பி மறுபடியும் அமர்கிறது.  எழுப்பிய அலைகள் ஏற்ப்படுத்தும் அதிர்வுகள், மனதின்  கால யந்திரத்தை முடுக்க, அரசல், புரசலான பிம்பங்கள் புகைபோல் விரிகிறது,திரைப் படமாய் பூட்டி யிருந்த காட்சிகள்.ஆசை, அவலம், அச்சம், அதீதம்  என காட்சிக்கு காட்சி, இப் புள்ளிகள் வெளிச்சம் பெற்று, விறு விறுப்பாய், திரை யரங்கில் தோன்றும், வண்ணக் கலவையாய்.

சில சத்தங்களின் டெசிபெல்களில், மனம் செவிடாகிறது. மௌன இராகங்களில், மனம் ஊமையாய் அழுகிறது.பற்றும் ,பரவசமும் இல்லாத நினைவுகள் கூட,மேலாடை போர்த்தி, இங்கு இருக்க லாயக்கில்லை என திக்காலுக் கொன்றாய் திரிகிறது.

இந் நினைவலைகளின் நில நடுக்கத்தில், நீயுரான்கள் நிலை தடுமாற, நீண்டு விசும்புகின்ற மூச்சும், குருதிப் புனல் வேகமும் கூட்ட, நெற்றிப் பொட்டில் வலி. "நேரமில்லை உனைத் தாலாட்ட", என எப்போதும் போல் சொல்லி, ஓடுகின்றேன் மனவாசல் கதவடைத்து.

(கொஞ்சம் குழப்பமாய் தலை வலிக்கும் போது எழுதியது .....)