பெற்றோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெற்றோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

திசை மாற்றிய திருப்பங்கள் ...1.

திசை மாற்றிய திருப்பங்கள் ...1.

பெற்றோர் கனவு ...

புது வருஷம் பிறந்து விட்டது .வாழ்க்கைப் புத்தகத்தில் மற்றுமொரு புரட்டப் பட்ட  பக்கம் .கடந்து வந்த பயணத்தில் இன்னொரு மைல் கல்.

புல் மேய்ந்த காராம் பசு போல் மனம் பழைய நினைவுகளை அசை போடுகிறது சந்தித்த மனிதர்கள்,எதிர் கொண்ட போராட்டங்கள், ஏற்ப்படுத்திய மகிழ்ச்சி, வலி, துயரம், கனவுகள், நனவுகள் என... கரை புரண்டு வரும் புதுப் புனலில்  அடித்து வரப் படும் இலை,தழை போல...
நுரைத்து வரும், ஆற்றுச்  சுழலில் குமிழியிட்டு கிளம்பும்  கொப்புளங்கள் போல்....
நினைவுகள் ...பீறிட்டு கிளம்புகின்றன.....
ஒவ்வொருவரும், தாம், தம் வாழ்வில் பல சமயம்சந்தித்த மனிதர்களால், படித்த புத்தகங்களால்,குறுக்கிட்ட நிகழ்வுகளால்.பெற்ற அனுபவங்கள்....







இவர்களின்  வாழ்க்கைப் படகின் திசையை மாற்றி பல சமயம் பெரும் திருப்பங்களை ஏற்படுத்துகின்றன.

"என்னடா ?.", பெரிய பீடிகையாய் போடுகிறானே, என உங்களுக்குத் தோன்றலாம்.

நான் வாழ்க்கைக் கோலங்கள்-8. என்ற தலைப்பில் குழந்தைகள் வளர்ப்பு பற்றிய கருத்தை எழுதி இருந்தேன்.பெற்றோர் தம் கனவை குழந்தைகள் மீது திணிப்பது சரியா எனபது பற்றிய என் அனுபவமும்,அது பற்றிய சிந்தனை களும்.

என்னுடைய குடும்பத்தில், ஏழு குழந்தைகளில், சரியாய் நடுவில் பிறந்தவன். நாலாவதாய் பிறந்ததை கூறுகிறேன். "பிள்ளைகள் பெரும் செல்வம்", " சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்", மாடு மேய்க்க ஆள் தேவை,  எனப் பல காரணங்கள் கூறினாலும், அப்போதெல்லாம் சிகப்பு முக்கோணங்கள் புழக்கத்தில் இல்லாத காலம்."நாம் இருவர், நமக்கு இருவர்", என்று நம் அரசாங்கம் விழித்துக் கொண்டதற்கு முந்தைய கால கட்டம் .

விவசாயியான என் தந்தைக்கு, பட்டப் படிப்பு படித்த, ஒரு நண்பர் இருந்தார். ஓரளவே படித்த, என் தந்தைக்கு, பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு உரமூட்டியவர். அவர் அடிக்கடி," ஏதாவது ஒரு பிள்ளையை பொறியியல் படிக்க வைத்து விடு",என அறிவுறுத்துவார். இந்த அருள் வாக்கு  "எப்போதும் சொன்ன பேச்சு கேட்டு, அப்பாவியாய்,  தேமே", என்று இருந்த என் தலையில் விடிந்தது ...நான் சொல்றது 1960 -ம் வருடங்களில்.இன்றையில் இருந்து ,அரை நூற்றாண்டுக்கு முன்னால்.

பள்ளி இறுதிப் படிப்பை திண்ணை வாத்தியார், கிராமம் ,சிறு நகரம் என, படிப் படியாய் தமிழில் படித்து கரை ஏறினேன் .புகு முக வகுப்பில் அனைத்தும் ஆங்கிலம். கண்ணை கட்டிக் காற்றில் விட்டார்போல ..பொறியியல் படிப்பிற்கு சரியாய் ஐந்து மதிப்பெண் குறைவாய் .கண் கசக்கினேன் ..

அப்புறமென்ன..படித்த அதே, குடந்தைக் கலைக் கல்லூரியில் இளநிலை பௌதீகம்.  தடங்கல் ஏதுமின்றி, இன்றி தப்பித்து வேலை தேடும் படலம். இப்போதைய தேசிய வங்கியில் எழுத்தர் (Clerk ) வேலை, அகில இந்திய வானொலியில் பொறியியல் உதவியாளர் ( Engineering Assistant ) என்ற வாய்ப்புக்கள்.

முன்னது ஊருக்கு பதினைந்து  கி.மீ அருகிலும், பின்னது அந்தமானில் கிட்டத் தட்ட ஆயிரம் கி.மீட்டருக்கு  அப்பாலும்.

நம்புங்க ..எவ்வளவோ சொல்லியும், அந்தப் பொறியியல் என்ற வார்த்தைக் காக, யார் தடுத்தும் கேளாமல்..முதல் முறையாக தந்தை பேச்சைத் தட்டி , கப்பலேறி கடல் தாண்டி 1971 -ல் அந்தமானில், வானொலி நிலைத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.

காதில் புகுந்த வண்டு மாதிரி "பொறியாளர் ",ஆகணும் என்ற வார்த்தை குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருந்தது.. சரின்னு, தாகம் தணிக்க A.M.I.E.,Grad.I.E.T.E.,. என்ற வகுப்புகளில் சேர்ந்து கணிசமான பாடங்களை,வெவ்வேறு  கால கட்டங்களில் பூர்த்தி செய்தேன்..பட்டங்களை எட்ட முடிந்தவரை முட்டினேன்...உதவிக்கு திரு.M.S.உதயமூர்த்தி அவர்களை அழைத்துப் பார்த்தேன் ..ஊக்கம் பெற வேண்டி, அவர் புத்தகங்களை படித்தேன்னு ...சொல்ல வர்றேன்.

அப்புறம் 1982- ல், என்னுடைய கீழ் வானத்தில், மெலிதாய் அரும்பியது,  ஒரு வெளிச்சக்கோடு. திருச்சி தேசியக் கல்லூரியில், ஆசிரியர்களுக்கென, மின்னணுவியலில்,பகுதி நேர முதுநிலை பட்டப் படிப்பு ஆரம்பிச்சாங்க. அடிச்சுப்  புடிச்சு,அரக்கப் பரக்க, அதிலே சேர்ந்தேன். என் துணைவியார் இரெண்டாம் குழந்தையை சுமந்த சமயம், அது. குடும்பத்தில்...நிறைய இக்கட்டுக்கள் .

அதிகாலை எழுந்து முதல் 'ஷிப்டு'' வேலையை முடித்து மாலை நேர வகுப்பு கள் போக வேண்டும். வீடு திரும்ப இரவு மணி ஒன்பது ஆகிவிடும்..பிறகு புத்தகங்களை எடுத்துக் கொண்டு, திருச்சி கண்டோன்மென்ட் பக்கத்தில், நீதி மன்ற வளாகத்தின் சுற்றுச் சுவருள் உள்ள சுடுகாட்டுப் பக்கம் படிப்பு..நள்ளிரவு வரை..முதுகலை பட்டம் பெற்றேன். மூச்சு வாங்கி விட்டது.

 இப்படித்தான் படிப் படியாய் உயர்ந்து, உதவி நிலையப் பொறியாளர் (Assistant Station Engineer) ஆனேன். இடையில்,நான் பணி புரிந்த தொலைகாட்சி நிலையத்தின் தயவினாலும், ஆதரவினாலும் I.I.T.(Delhi), மற்றும் I.I.T (Kanpur)  இன்னும் சில  தேசிய பயிற்சி கழகங்களில் பயிலும் வாய்ப்புக்கள் கிடைத்தது.

ஒரு கிராமத்துப் பையனுக்கு வானத்தை தொட்ட சந்தோசம்.

அப்புறம்....." இருக்கிற வேலையைவிட்டு விட்டு,பறக்கிற வேலையை  புடிக்குறா மாதிரி ",  வளைகுடா நாட்டுக்கு ஓடினேன். இதையெல்லாம் பத்தி பின்னாடி சொல்றேங்க ..
அதுவும் ஒரு பெரிய கதைங்க ..

ஏதோவொரு தாகம் ..எப்போதோ ஏற்றி வாய்த்த நெருப்பு ஊதிகிட்டே இருக்கணும் ..அவ்வளவு தாங்க..

பொறிகள் இன்னும் வரும் ...


நன்றி : கூகுள் படங்கள் . 

செவ்வாய், 13 டிசம்பர், 2011

வாழ்க்கைக் கோலங்கள் புள்ளி .8

நாளைய தலைமுறை ....நமது செல்வங்கள்.


வாழ்க்கைக் கோலங்களின் எதார்த்த நாயகர்களாகிய முகுந்தனும் வசந்தனும் தங்களின் குழந்தைகளின் எதிர் காலம் பற்றி கவலை அடையத் தொடங்கினர் .பள்ளியை பாதியில் விட்ட முகுந்தனும், முதுகலை பட்டம் பெற்ற வசந்தனுக்குமே தத்தம் சிறார்களை வளர்க்கும் விதம் சரியா ? என்ற ஐயப்பாடு.
வழக்கம் போல் தம் ஐயம் தெளிய, தங்கள் ஆசிரியர் திரு. கல்யாணராமனைத் தேடித் போயினர். கால ஓட்டத்தில் கல்யாணராமன் முதுமையின், மூத்த நிலையில் இருந்தார்.
            பழைய மாணாக்கர்களின் வருகையில் மனம் மகிழ்ந்தார்.நெடிது நேரம் அளவளாவிய பின், ஆசிரியர் கல்யாணராமன், "வெகு வேகமாய் வளர்ந்து வரும் நவீன உலகில் பெற்றோர் குழந்தைகளியிடையேயான தலைமுறை இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது..ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனிப்பட்ட மலர் போல்.. ..இடம்,பொருள், வசதி,கல்விக்கான வாய்ப்பு, வளரும் சமுதாய சூழல், பெற்றோர்களின்  ஈடுபாடு,பள்ளியின்  தரம், ஆசிரியர் என பன்முக பங்களிப்பில்இம்மலர்  பரிணமிக்கிறது.மாதா,பிதா, குரு என்ற தத்துவம், குழந்தை வளர்ப்பின் கால கட்டங்களே.
                  "குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பதா? சுதந்திரம் கொடுத்து வளர்ப்பதா ?"எனபது தொன்று தொட்டே எழுப்பப்படும் கேள்வி.சரியான முடிவு சொல்ல இயலா  தர்க்கம். பாமரர் படித்தோர் என பெற்றோர் பலதரப்பட்டவர். "எது சரி? ", என எப்படி முடிவு செய்ய இயலும்?.இதற்க்கு சரியான தீர்வு எது?.
 காலம் காலமாய் எல்லோரும் கேட்டு  வரும் இக்  கேள்விக்கு விடை என்ன என்ற விவாதம், ஒரு முறை பன்னாட்டு அறிஞருக்கு இடையே நடந்ததாம். அந்த பட்டி மன்றத்தின் இறுதித் தீர்வு "உன் தந்தை,தாய் உன்னை எவ்வாறு வளர்த்தனர் என்பதை முதலில், நீ  புரிந்து கொள்.அதில் உள்ள நிறைகளை ஏற்று,குறை என்று கருதுபவற்றை  களைந்தாலே, உன்னை விட உன் குழந்தைகளை நிறைவாய் வளர்க்கலாம் "என்பதே.
"குழந்தை வளர்ப்பில் நம் தாய் தந்தையே நமக்கு முன்னோடி,மேலும் குழந்தைகள் பெற்றோர்களுடன் தம் எண்ணங்களை சுதந்திரமாய்  பகிர்ந்து கொள்ளும் அளவு தோழமையுடன் வளருங்கள் ",என முடித்தார் ஆசிரியப் பெரு மகன்.
நன்றி : கூகுள் படங்கள்