செவ்வாய், 31 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும் .8


  
மும்பை முதல் தில்லி 

மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும் என்ற சொல் வழக்கின்  அர்த்தம் மிக ஆழமானது என்பதை இப்போது உணர்கிறேன்.இடம் ,பொருள், ஏவல் என்ற பல நிலைகளின் பரிணாமங்களை கூட்டுகிறது, இந்த பழ மொழி .முற்றாத ,என் கதையின் தொடர்ச்சிக்கு வருகிறேன்.

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும் .7


சுத்தம் சுகம் தரும் ..

நூறு எனபது ஒரு நல்ல எண்.எண் கணிதப்படி இதன் கூட்டுத் தொகை ஒன்று .ஒளி தந்து உலகை ரட்சிக்கும் சூரிய பகவான் இந்த எண்ணுக்கு அதிபதி .சகல் ஜீவ ராசிகளும்   தோன்றக் காரணமாய் இருக்கும் காரண கர்த்தா. அவரின்றி அகிலத்தில், ஓர் அணுவும் இல்லை .

பொதுவாகவே  நூறு எனபது ஒரு மைல் கல். ஒரு அளவீடு. குறிக்கோள்களை எட்டிட பலரும்  அமைத்துக் கொள்ளுகிற எல்லைக் கோடு .மேலும் எந்த ஒரு அரசு பதவி ஏற்றாலும் முதல் நூறு நாள், தெம்பா அறிக்கை விடுகிற கால கட்டம். அப்புறம் வம்பெல்லாம் , தானே வந்து சேரும் ,எனபது, இந்த கட்டுரைக்கு அவசியமில்லாத விஷயம் .

வெள்ளி, 27 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும் ..6


மும்பை முதல் தில்லி..இரெண்டாம் கட்டம். 

செம்பட்டைத் தலை ,சிவந்த கண்கள் , ரயில் அழுக்குகளில் கணிசமாக   கனக்கின்ற, கசங்கிய உடை. பாலைவனத்தில் நாடோடியாய் ஒட்டகம் மேய்த்து, திரும்பிய தோற்றம். கடிகார முட்கள் வேகமாய் நகர, இனியும் காத்திருத்தல் பயன் இல்லை என்று, தொலைபேசியில் நண்பரின் அலுவலக தொடர்பு எண்ணைச் சுழற்றினோம் ." ட்ரிங் ,ட்ரிங்", என்பதற்கு  பதிலாய், ம்ம்.. ம்ம்.. என்று நீண்ட குரலில் அழுதது. மீண்டும், மீண்டும் இந்த ஒரு தலை ராகம்.விரல் வலிக்க ,தொலைபேசி, வெறும்  தொல்லைபேசியாய். வயிற்றுக்குள் ஜந்துக்கள் நெளிய ,ரெத்த நாளங்களின் அழுத்தத்தில், குருதிப் புனல் கூடி  நெற்றிப் பொட்டில், சம்மட்டி அடிகள்.

சூரியன் சற்றே அடிவானம் இறங்க, என் அடிவயிறு ரொம்பவும் கலங்கியது. அறிமுகமில்லா, புது இடம். தப்பு பண்ணிட்டோம். அப்படின்னு எப்போதும் போல, இக்கட்டான நேரத்தில் இடித்துரைத்தது, மனசாட்சி. நேரமில்ல!. இப்ப, அதோட தர்க்கம் பண்ண !. காணமல் போன பொருளை கண்டு பிடிக்க நினைவுகளின் வேர்களை தோண்டுறா மாதிரி, மனசு சம்பவக் கோர்வைகளை   பின் தொடர்ந்து பாக்குது. கொஞ்சம் நான் இதுக்காக, திரும்பவும் மும்பை போவணும்.கருவின் ஆரம்பம், அங்கேதான் .

நம்பிக்கை நட்சத்திரங்கள் ..1



தலை நிமிரவைக்கும் தமிழர்  

வணங்குகிறோம் .வாழ்த்துகிறோம் .பல்லாண்டு வாழவும் 
தங்கள் சீரிய பணி,இன்னும் சிறப்பாய் தொடரவும்.

கலெக்டர் சகாயம் -நேர்மையின் உருவம்

தினந்தோறும் நள்ளிரவு இரண்டு மணியாகிறது அவர் உறங்கச் செல்வதற்கு!

அது வரையில் மலை போல குவிந்து கிடக்கும் கோப்புகளை ஒவ்வொன்றாக பார்வையிடுகிறார். கையெழுத்திடுகிறார்.
எந்த ஒரு கோப்பும் தன் பார்வைக்கு வந்து விட்டே செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.

மறுநாள் காலை ஆறு மணிக்கெல்லாம் மீண்டும் நடைபயிற்சி, யோகா என்று சுறுசுறுப்பாக ஆரம்பித்து விடுகிறார்.
”எப்பவாச்சும் அவரு தூங்குவாருங்களா?” – கேட்கிறார்கள் ஆட்சியர் அலுவலக கடைநிலை ஊழியர்கள்.

அவர் தான் மதுரை மாவட்ட ஆட்சியர் உ. சகாயம், ஐ.ஏ.எஸ்.
’லஞ்சம் தவிர்த்து – நெஞ்சம் நிமிர்த்து’ என்ற வாசகம் அவரது அலுவலகம் முழுவதும் பளிச்சிடுகிறது.
நாமக்கல்லில் ஆட்சியராக இருந்த போது இந்திய ஆட்சிப் பணி வரலாற்றிலேயே முதல் முறையாக தனது சொத்துக் கணக்கை மாவட்ட இணைய தளத்தில் வெளிப்படையாக வெளியிட்டு சக அதிகாரிகளின் சாபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டவர். “இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?”

“கிராம நிர்வாக அதிகாரிகள் அவரவர் வேலை பார்க்கும் கிராமத்தில் தான் தங்கியிருக்க வேண்டும்” என்ற அடிப்படை விஷயத்தை அழுத்தம்திருத்தமாகச் சொல்லியவர். அதனால் அவர்களின் கோபப்பார்வைக்கும், ஏச்சுபேச்சுக்கும் ஆளாகினார்.
கலெக்டர் அலுவலக வாசலிலேயே கூட்டம் போட்டு தகாத வார்த்தைகளால் அவரைத் திட்டும் அளவுக்கு கிராம நிர்வாக அலுவலகர்களை தூண்டி விட்டார்கள் அவரால் பாதிக்கப்பட்ட அரசியல்வா(ந்)திகள்.

’மசூரி’யில் இரண்டு மாத கால பயிற்சிக்கு சென்று வாருங்கள் என்று 2,000 கிலோ மீட்டருக்கு அப்பால் அனுப்பி விட்டு நைஸாக இங்கே நாமக்கல் ஆட்சியர் பதவியிலிருந்து தூக்கினார்கள். அடுத்து எங்கும் பணி ஒதுக்காமல் காத்திருப்பில் வைத்திருந்தார்கள். சில மாதங்கள் கழித்து உப்புச்சப்பில்லாத பணி ஒன்று பேருக்கு ஒதுக்கப்பட்டது. அதிலும் சென்று தன் ‘வேலைகளை’ காட்ட ஆரம்பித்த போது தான் சட்டமன்ற பொதுத் தேர்தல் வந்தது.

இவரது பணி நேர்மையைப் பார்த்த தேர்தல் ஆணையம் இவரை மதுரை ஆட்சியராக பணி மாற்றம் செய்து உத்தரவிட்டது. அதன் பிறகு நட்ந்ததெல்லாம் நாடறியும்.

‘திருமங்கலம் ஃபார்முலா’ என்ற பெயரில் ‘தேர்தலில் வெற்றி பெறும் வழிக்காக’ அப்போதைய ஆளுங்கட்சி ஒரு வழிமுறைய உண்டு செய்து அதன் மூலம் ஆட்சியை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு விடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருந்த நேரம். அதே திருமங்கலம் உள்ளடக்கிய மதுரையில் நேர்மையான தேர்தல் நடந்தேற வைத்தார் சகாயம்.

தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசும் மதுரையிலேயே ஆட்சியராக தொடரச் செய்துள்ளது.

ஆனந்த விகடனின் 2011 டாப் 10 மனிதர்கள் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளார் சகாயம். போன வருடத்திய டாப் 25 பரபரப்புகளில் முதலாவதாக அழகிரியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள விகடன் அதிலும் இவரது அதிரடியைப் பாராட்டியுள்ளது. ‘மக்கள் சேவகர்’ என்ற பட்டத்தை சகாயத்துக்கு வழங்கியுள்ள விகடன், தனது வாசகர் மேடை பகுதியில் சகாயத்திடம் வாசகர்களை கேள்வி கேட்கச் செய்து பதிலை வரும் வாரங்களில் வெளியிடவிருக்கிறது.

சுதந்திரத்திற்காகப் போராடிய கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வாரிசுகள் வறுமையில் வாடுவதைக் கேள்விப்படும் சகாயம், அவர்களை அழைத்து மதுரையில் உள்ள ‘உழவன் உணவகம்’ என்ற இயற்கை உணவுச் சாலையில் (இதுவும் இவர் அமைத்தது தான்) ஒரு உணவகம் அமைக்க தகுந்த ஏற்பாடுகளையும், பயிற்சியையும் வழங்கச் செய்திருக்கிறார். இப்போது அவர்கள் அங்கே வெகு மகிழ்ச்சியாக தினமும் வியாபாரம் செய்து வருகிறார்கள். அதே உழவன் உணவகத்தில் இன்னமும் ஒரு சில சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கும் இதே போல உணவகம் அமைக்க உதவியுள்ளார்.
இது குறித்த செய்தி அண்மையில் நாளேடுகளில் வந்ததற்கும் மறுநாள் காலை 7.30 மணியளவில் ஆட்சியர் இல்லத்துக்கு சுமார் 84 வயதுள்ள பெரியவர் ஒருவர், “நானும் கப்பலோட்டிய தமிழரின் வாரிசு. ஆட்சியரைப் பார்க்க வேண்டும்” என்கிறார். உடனடியாக அவரை உள்ளே அழைக்கிறார் ஆட்சியர். உள்ளே நுழைந்து ரோஜாப்பூ மாலையும், பொன்னாடையும் போர்த்தி வாழ்த்தி வணங்குகிறார் சிதம்பரம் என்ற அந்தப் பெரியவர். “வ.உ.சி.யின் வாரிசுகளுக்கு உண்மையிலேயே நீங்கள் செய்திருக்கும் உதவிக்காக நாங்கள் அனைவரும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்” என்கிறார்.

“நான் அவருடைய மனைவி வழி உறவினர். நாளிதழில் நீங்கள் அவருடைய மகன் வழி வாரிசுகளுக்கு உதவியிருப்பதை நேற்று நள்ளிரவு தான் படித்தேன். உடனடியாக நன்றி சொல்வதற்காக ஓடோடி வந்தேன்” என்று உணர்ச்சிவசப்படுகிறார் அந்தப் பெரியவர். “மீனாட்சியம்மன் அருளில் நான் நல்ல நிலைமையில் இருக்கிறேன். ஆனால் வ.உ.சி.யின் வாரிசுகள் சிலர் மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்கு முன் பல ஆட்சியர்களைச் சந்தித்தும் பார்ப்பதற்கு கூட அனுமதிக்காத நிலையில் நீங்கள் செய்திருக்கும் இந்த உதவி நிச்சயம் பாராட்டத்தக்கது” என்று கூறிவிட்டுக் கிளம்புகிறார் பெரியவர்.
கப்பலோட்டிய தமிழரின் வாரிசு என்பதால் இப்போது செய்யப்பட்டுள்ள உதவி வெளியில் தெரிந்திருக்கிறது. இப்படி இல்லாமல் எத்தனையோ பேருக்கு தன்னால் முடிந்த தனது ஆளுமைக்குட்பட்ட நேர்மையான உதவிகள் அனைத்தையும் தினந்தோறும் செய்து கொண்டு தான் இருக்கின்றார் சகாயம்.

திடீர் திடீரென பள்ளிக்கூடங்களுக்கும், பேருந்து நிலையங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் ஆய்வுக்குச் செல்கிறார். பள்ளிக்கூடங்களில் சத்துணவு போடுவது வருடத்திற்கு 200 நாட்கள் தான் போடுகிறார்களாம். அப்படி ஒரு பள்ளிக்கூடத்திற்குச் சென்ற போது அங்கிருந்த மாணவிகள் தேர்வு சமயங்களில் தங்களுக்கு சத்துணவு போடப்படுவதில்லை என்று சொன்னதும் உடனடியாக தேர்வு சமயங்களிலும் அவர்களுக்கு சத்துணவு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார். “தேர்வு சமயத்தில் பசியோடும், பட்டினியோடும் இருக்கச் செய்தால் அவர்கள் எப்படி ஒழுங்காக தேர்வு எழுத முடியும்?” என்று கேட்கிறார். நியாயம் தானே! சொல்லப் போனால் விடுமுறை தினங்களில் கூட சத்துணவு வழங்க அரசு வழி வகை செய்ய வேண்டும்.

பேருந்து நிலையக் கடைகளில் ‘பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்காதீர்கள்” என்று அறிவுறுத்துகிறார். அங்கே இவரைப் பார்த்து ஓடி வந்து கை குலுக்கும் இளைஞர்கள், குழந்தைகள், முதியோர்களிடம் அவர்களைப் பற்றி விசாரிக்கிறார். தேவைப்படும் இடங்களில் அறிவுரை வழங்குகிறார்.

பொதுமக்கள் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று தன்னுடைய மொபைல் நம்பரை வெளியிட்டிருந்தார். இப்போது எல்லாம், “ஐயா, கேஸ் கம்பெனியிலே ஃபோன் அடிச்சா எடுக்கவே மாட்டேங்கிறாங்க” என்பது போன்ற புகார்கள் எல்லாம் இவரை அழைத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்போதும் கோபப்படாமல் தனது உதவியாளர்களிடம் ஃபோனைக் கொடுத்து, “இது என்னான்னு கேட்டு பிரச்னையை தீர்க்கப் பாருங்க” என்கிறார்.

“எது எதையெல்லாம் ஒரு ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்று தெரியாமல் இருக்கிறார்கள் பாருங்கள். எனக்கிருக்கும் வேலைப் பளுவில் இதிலெல்லாம் ஈடுபட்டுக் கொண்டிருக்க முடியாது. ஆனாலும் இவருகிட்ட கொண்டு போனா பிரச்னை தீர்ந்திடும்ன்னு நினைக்கிறாங்க போல. அதான் எதுவா இருந்தாலும் ஃபோன் அடிச்சிடுறாங்க” என்கிறார் சிரித்தபடி!

சுமார் முப்பதாயிரம் வங்கிக் கணக்கில் இருக்கிறது சேமிப்பு. கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் ரூபாயில் எல்.ஐ.சி. கடனுதவியில் வாங்கிய வீடு ஒன்று மதுரையில் இருக்கிறது. ஒரு மாவட்ட ஆட்சியரின் இன்றைய பொருளாதார நிலை இது தான் என்றால் ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் அதான் உண்மை.

”சில ஆண்டுகளுக்கு முன் என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. என் மனைவி ஆஸ்பிடல்ல துடிச்சிக்கிட்டு இருக்காள். அக்கம்பக்கத்தில் உள்ளவங்களோ "உங்க வீட்டுக்காரர்தானே கலால் துறையில இருக்காரு. சிக்னல் காண்பிச்சாலே பிராந்தி கடைக்காரங்க லட்சம் ரூபாயினாலும் வந்து கொட்டிடுவாங்களே'னு சொன்னாங்க. ஆனா என் மனைவியோ "லஞ்சப் பணத்தில்தான் என் குழந்தையைப் பிழைக்க வைக்கனும்னு அவசியமில்லை'ன்னு சொன்னாங்க. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப,எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டு வந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு! நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா… அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய் கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' – தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம். இதான் சகாயம்.
நேர்மை எனும் வேள்வித்தீயில் தினந்தோறும் உழன்று தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் அனைவருக்கும் செய்ய வேண்டும் என்று துடிப்போடு செயல்படும் சகாயம் போன்ற அதிகாரிகள் இன்றைய தேதியில் ஒரு சிலராவது இருப்பதால் தான் நாட்டில் மழை பொழிகிறது.
நிரம்பிய தமிழ் பற்றாளர். பள்ளிக்கூடங்களில் ஆய்வு செய்யச் செல்லும் போதெல்லாம், “தமிழிலேயே கையெழுத்திடுங்களேன்” என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

இவர் இத்தனை நேர்மையாக இருப்பதற்கு இவரது குடும்பத்தினரும் காரணம். புரிந்துணர்வு கொண்ட மனைவி விமலா. மகனின் பெயர் ‘அருள் திலீபன்’. மகளின் பெயர் ‘யாழ்’.
“புதுக்கோட்டை அருகில் பெருஞ்சுனை கிராமத்தில் பிறந்தவன் நான். இப்படித்தான் வாழ வேண்டும் என்று எனக்கு வலியுறுத்தியவர் என் அம்மா. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே… ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ… கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன். தினமும் ஒரு 10 பேராவது எங்கள் வீட்டில் பசியாறுவார்கள். அதை ஏன் நூறு பேர், ஆயிரம் பேர் என உணவருந்தச் செய்யக்கூடாது என்று சிறு வயதிலேயே ஏங்குவேன் நான். இப்போது கூட என்னுடைய லட்சியம் கிராமப்புற ஏழைகளுக்காக அனைத்து வசதிகளும் கூடிய இலவச மருத்துவமனை அமைப்பது தான்” என்கிறார் அவர். “நான் வேலைக்கு போய் சம்பாதித்து பணம் கொண்டு வருகிறேன். அதை வைத்து ஆஸ்பத்திரி கட்டலாம்” என்கிறார் ஒன்பதாவது படிக்கும் அவரது மகன் ‘அருள் திலீபன்’.

”காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்ஸியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்ஸி கம்பெனிக்குப் போனேன். நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்… பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. ’சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்… அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.

நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்ஸிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை. ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்ஸிக்கு நான் சீல் வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது” – பெப்ஸி சம்பவம் குறித்து கேட்டதும் சொல்கிறார்.

ஒரு பிரபல பதிப்பகம் சமீபத்தில் ஒரு எழுத்தாளரைக் கொண்டு இவர் குறித்து ஒரு கட்டுரைத் தொகுப்பு எழுதி வெளியிடும் ஏற்பாடுகளைச் செய்தது. விஷயம் கேள்விப்பட்ட சகாயம், “அட, நான் என் கடமையைத் தான் செஞ்சுக்கிட்டிருக்கேன். அதெல்லாம் வேண்டாம்” என்று அன்போடு மறுத்திருக்கிறார். அந்தப் புத்தகத்தில் உண்மையான நடந்த சம்பவங்களுடன் கூடவே, மக்கள் இவரைப் பற்றி இப்படி பேசிக் கொள்கிறார்கள், இப்படி சம்வங்கள் நிகழ்ந்ததாம் என்கிற ரீதியில் சில நடக்காத சம்பவங்கள் இடம் பெற்றிருந்ததாம். “எல்லாமே அவரை ஆஹா, ஓஹோன்னு பாராட்டும் படியான சம்பவங்கள் தான். ஆனாலும் அப்படியெல்லாம் நடக்காத சம்பவங்களை வரலாற்றில் பதிய வேண்டாமே”ன்னு மறுத்திட்டாருங்க” என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

இப்படி எத்தனையோ அதிரடி ஆக்‌ஷன் சம்பவங்கள். உணர்ச்சி வசப்பட வைக்கும் உதவிகள்…

தொடுவானம் (www.thoduvanam.com) திட்டம் மூலம் கிராமப்புற மக்கள் தங்கள் புகார்களை இணைய வழியாக பதியும் திட்டம். ‘உழவன் உணவகம்’ என்ற இயற்கை உணவகச் சாலை. மாதிரி கிராமம் என்ற திட்டத்தின் மூலம் முன்மாதிரி கிராமங்களை உருவாக்குதல். ஊனமுற்றவர்களுக்கு ஊன்று கோல் வழங்கும் திட்டம். இலங்கை ஏதிலியர்களுக்கு அவர்கள் சொந்தக் காலில் நிற்கும் விதமாக ஆடை உருவாக்கும் கூடம், BPO.. இப்படி பல திட்டங்கள் தீட்டி மதுரை மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக்க உளப்பூர்வமாக செயல்படுகிறார்.

சமீபத்தில் நடந்த தமிழக மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் சிறப்பான சேவைக்காக மாண்புமிகு தமிழக முதல்வரின் மூன்றாவது பரிசினை பெற்றுள்ளார், மக்கள் மனதில் முதலிடம் பெற்றுள்ள ‘மக்கள் சேவகர்’ சகாயம்.

வாழ்த்துவோம்!

நன்றி தமிழோவியம்



ஜனநாயகத்துக்கு எப்போதெல்லாம் ஊறு நேருகிறதோ - அப்போதெல்லாம் நேர்மையான அரசியல்வாதிகள், அதிகாரிகள் மக்களுக்கு நம்பிக்கை தருகிறார்கள். "நாங்கள் இருக்கும்வரை ஜனநாயகத்துக்கு எதுவும் நேராது" என்று
 ·  · 

வியாழன், 26 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும் ..5.


மும்பை யில் இருந்து தில்லி ..முதல் பயணம்.

“It is good to have an end to journey toward; but it is the journey that matters, in the end” ....By Ursula K.Leguin    
.

ஒவ்வொரு மனிதனும், காலத்தின் கட்டாயத்தில், எப்போதேனும் தன வாழ்க்கையில் வேறுபட்ட இடங்களுக்கு, மாறுபட்ட சூழலில் பயணிக்க நேரிடுகிறது. இந்த பயணங்களில்,சில மனதில் மகிழ்ச்சி எனும் மத்தாப்பு களையும், மற்றும் சில பயணங்கள் அச்சத்தையும், திகிலையும்,  அல்லது இன்னவென்று சொல்லத் தெரியாத   எண்ண  அலைகளை காலம் காலத்துக்கும் ஏற்படுத்தி விடுகிறது.


பசு மரத்து ஆணியாய் இவை   மனதில் பதிந்து, அவசரமாய் மேய்ந்து, பின் ஆர அமர அசை போடும் பசு போலவும், அவ்வப்போது மனக் குகையில் அதிர்வு கேட்ட வெளவால் வட்டமிட்டு வந்து அமர்தல் போலவும். குளத்தில் இட்ட கல் போல, விரிகின்ற வளையங்களாய் அலை எழுப்பி, பின் வலுவிழக்கின்றன. காலம்  கடுகிட,  தன்னில் சற்றே விலகி, தொலைவில் நின்று, புகை போன்று எழும்புகிற இந் நினைவுகளை  நோக்கின், பெரிதே நகைப்பையும்,சிறிதே  நாணத்தையும் கூட ஊட்டும்.

புதன், 25 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும் ..4



இதம் தரும் இருப்பிடம் ..இல்லத்தில் நல்ல இல்லம்.


COOLING SYSTEM
  
குத்துக் காலிட்டு , 
கூரை மேலே குந்தி,
நீர் மெள்ள  உறிஞ்சி ,
நெருப்பான காற்றின்,
நெஞ்சம் குளிர வீசும்.
நிரம்பவே சூடு தணித்து  
          
மச்சு மேலே படுத்து, 
மயக்க நிலையில் கிடக்கும், 
நாகமாய் நீண்ட குழலில்,  
நளினமாய்த், தானே தவழ்ந்து
கொப்பளிக்கும் அறைக்குள் 
குளிர்ந்த காற்றாய்த் தானே !.


HEATING  SYSTEM


































பருவ நிலை மாற ,
பல்லைக் கிட்டும், குளிர். 
கும்மட்டி அடுப்பு மூட்டி, 
குளிர் காற்றில், கனல் ஏற்றி, 
நிலவறையில் நீண்டு, 
நெளிகின்ற குழாய்க் குழுமம் 
ஊரிவரும் காற்று,உடன்  
சீறி வரும்,அறைக்குள்.
சிதற வைக்கும் குளிரை . 
சிவக்க வைக்கும் அறையை .
கத கதக்க வைக்கும் 
கம்பளிகள் தேவையின்றி .


( FRESH AIR )


உசுப்பேத்தும் அனல் காற்றை,
உறவாடி, உள் கலந்து 
ஊடலாய் கொஞ்சும்,
கொஞ்சம் குளிர்காற்று.
நெஞ்சம் குளிரவைக்கும், 
மஞ்சம் மகிழ வைக்கும்.
மகிழ்வில் மனம் சிரிக்கும் .


நன்றி :கூகுள் படங்கள்           

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும் ..3


மர வீடுகளும்....என் மனவோட்டமும்.


உலகத்திலே வசிக்கத் தகுந்த சிறந்த நகரங்களில் மெல்பர்ன் (Melbourne ) முதலாவது எனபது, எப்படி?.. என்று, எனக்குள் நிறைய கேள்விகள், எழும்பின. உணவு, உடை, உறையுள் இந்த மூன்றில், முதல் இரண்டையும் மனிதன் தன் விருப்பப் படி, அடிக்கடி, மாற்றிக் கொள்ள இயலும். ஆயின் இருப்பிடம் பல ஆண்டுகள் நிரந்தரமாய் நிலைத்து இருக்கும் தன்மையில் அமைத்துக் கொள்ளுகிறது மனித இயல்பு.




 ஆஸ்திரேலியா சுமார் 23  மில்லியன் ஜனத் தொகையுடன் உலக நிலப் பரப்பில் ஆறாவது இடம். நம் இந்திய தேசம், 1210 மில்லியன் ஜனத் தொகையுடன் உலக நிலப் பரப்பில் ஏழாவது இடத்தில.ஒரு சதுர கி .மீ க்கு மூணு நபருக்கும் கீழே  இங்கே வசிக்க, நாம் 394  பேர் என்ற எண்ணிக்கையில், மூச்சு முட்டுகிறோம்.ஆனால் நம்ம ஜனத் தொகை ஒரு பெரும் பலமும், பலவீனமும் கூட. இதை ஒரு மாபெரும் பலமாய் மாற்றிடலாம்..முடியுங்கிறது.. உண்மைங்க ..இதை பத்தி, அப்புறம், ஒரு பதிவு எழுதினாலும், எழுதுவேன்னு கொஞ்சம் அச்சாரம் இப்போவே போட்டு வைச்சுகிறேன்..

வியாழன், 19 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும்.2.


கேடில் விழுச் செல்வம் கல்வி .

மெல்பர்னுக்கு வர முடிவெடுத்ததால் சிங்கப்பூரில் பாதியிலேயே ராஜனும், காயத்ரியும் படிப்பை விட வேண்டிய தாயிற்று. மேலும் இந்தியா,சிங்கப்பூரில் மே ஜூனில் பள்ளி ஆரம்பித்து மார்ச் அல்லது ஏப்ரல் வகுப்புக்கள்  முடியும். இங்கே பிப்ரவரி முதல் வாரம் ஆரம்பமாகி, டிசம்பர் நடுவில் முடிந்து விடும் .எப்படியானாலும் ரெண்டாம் கெட்டான் சூழ் நிலை.  புலம் பெயரும் முன்னதாகவே குழந்தைகள் பள்ளியில் சேர நாங்கள், 'ஹோம் வொர்க்' செய்தோம். ஏற்கனவே "அடிலைட்"ல் வசிக்கின்ற தங்கை வீட்டார், முன்பே குடி பெயர்ந்த தோழர்கள், இணைய தளம், மின்னஞ்சல்போதாது என்று... என் மகள் குடும்பத்தோடு ஒரு முறையும், தனியாகவும் ஆஸ்திரேலியாவுக்கு  விஜயம் செய்தார். குழந்தைகள் புதிய சூழல், புதிய பள்ளி இதை யெல்லாம் சமாளிக்க இயலுமா  என்பன பற்றிய கவலைகளுடன்.

செவ்வாய், 17 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும் .1

பயண அனுபவம்... .மெல்பர்ன்.
மெல்பர்ன்( Melbourne ) வந்து கிட்டத் தட்ட இரண்டு மாதமாகி விட்டது. சிங்கப்பூரில் தங்கியிருந்த வீடு காலி  செய்து கப்பலில் அனுப்பிய சாமான்கள் இன்னமும் வந்து சேர வில்லை.கட்டில், சோபா,மிக்சி, கிரைண்டர், மற்ற இத்தியாதி  சாமான்கள். இட்லி, தோசை, இடியாப்பம்  சாப்பிட்ட நாக்கு . பதிலா பிரெட், பரோட்டா, சப்பாத்தி  என உணவு வகைகளில் மாற்றம். இவையெல்லாம் நான் எப்போதாவது தின்னும் அயிட்டங்கள் , இப்போது எப்போதும் சாப்பிடும் படியான நிலைமை . இரண்டு கட்டில், மெத்தை, தட்டு முட்டு சாமான், என போய்க் கொண்டு இருக்கிறது, நித்திய  வாழ்க்கை.இங்கே .


மெல்பர்ன் ஒரு அருமையான நகரம். உலகத்தில் வசிக்கத் தகுந்த நகரங்களின் தர வரிசையில் " நம்பர் ஓன்", என்று 2011-ம் வருட ஆகஸ்ட் மாத ஆய்வில் பிரசித்தம். இந்த வரிசையில் முதல் பத்தில் மூன்று நகரங்கள், ஆஸ்திரேலியா நகரங்கள் எனபது இன்னும் விசேஷம். முறையே சிட்னி ( Sydney ) ஆறாம் இடத்திலும், அடிலைட் (Adelaide) எட்டாவது  இடத்திலும் உள்ளன. இந்தத் தர வரிசை கல்வி ,கலாசாரம், சுத்தம், சுகா தாரம், சுற்றுசூழல், பொழுதுபோக்கு, பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, அரசியல் ஸ்திரத் தன்மை ஆகியவற்றை மையமாய் வைத்து   கணிக்கப்பட்ட ஒன்று. இதில் தட்ப வெட்ப நிலையும் ( climate ), விலைவாசியும்(Cost of Living) கணக்கில் வராது.

"என்னாடா?",  இது, துட்டு கிட்டு கொடுத்து இந்த லிஸ்டை தயார் பண்ணி விட்டார்களோ ? ,என சந்தேகம் .ஆனால் இந்த மூன்று நகரங்களையும் நான் நேரிலேயே பார்த்து விட்ட படியால் இது மிகவும் உண்மை என்றே படுகிறது.

Wedding  at Adelaide  


Sydney  Reception  
கடந்த முறை 2006 - ம் ஆண்டு ஜூலை  மாதம், என் தங்கை மகளின் திருமணம் "அடிலைட் விநாயகர்", கோவிலில்.அதற்கு நானும் என் துணைவியாரும்  வந்து இருந்தோம்.என் மைத்துனர் டாக்டர். முப்பத்தைந்து  வருடங்களுக்கு முன்பே  இங்கு  குடி யேறியவர். அப்புறம், இப்போது தான் நாங்கள் முதல் முறையாய், மைத்துனர்  வீட்டிற்க்கு, விஜயம் செய்தோம்.  .


கல்யாணம் முடிந்த  பிறகு, மறு வாரம் சிட்னியில்,  மணமகன் வீட்டார் வரவேற்பு . அடிலைடில்   இருந்து விமானம் ஏறி கான்பெர்ரா (Canberra ) வந்து, பார்லிமென்ட் கட்டிடடம் எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு, பிறகு காரில் சிட்னி வந்து சேர்ந்தோம் சுமார் 250  கி .மீ தரை மார்க்கமாய். வழி எங்கும் ரொம்ப ரம்மியமான இயற்கைக் காட்சி.௦௦ மிக நேர்த்தியான சாலைகள் அங்கு 'சிட்னி பாலம்'  எல்லாம் பார்த்தோம்.1932 -ல் முழுதும் ஸ்டீல் கட்டுமானம் .சுருக்கமா அறுபது லட்சம் 'ரிவெட்' அடிச்சிருக்காங்க .௦  ஆனால் அதுக்கு பக்கத்திலே புகழ் பெற்ற 'ஒபேரா ஹவுஸ்' பார்ப்பது,ஏனோ  'மிஸ்', ஆகி விட்டது. வரவேற்பெல்லாம் முடிந்து திரும்பவும் அடிலைட் சென்று அங்கு 'பொட்டனிகல்  கார்டன் ' , 'மியுசியம்'  'யுனிவேர்சிட்டி'   மற்றும், பல இடங்களை கண்டு களித்து, ஒரு மாதம் கழித்து, ஊர் திரும்பினோம் .

கடந்த முறை  இந்த பயணத்தில் எங்களுக்கு ரெண்டு.மூணு சிக்கலான அனுபவங்கள். பங்களூரில் இருந்து மும்பை.பிறகு      உள்ளூர் விமான தளத்தில் இருந்து "சத்ரபதி சிவாஜி" சர்வதேச விமான நிலையத்திற்கு டாக்ஸி. "சிட்னி", செல்லும் 'குவாண்டாஸ்' விமானம் .பின் சிட்னி சர்வே தேச விமான தளத்தில் இறங்கி 'அடிலைட்' க்கு லோக்கல் பிளைட்.இது தான் எங்கள் நிகழ்ச்சி நிரல். விமானம் சிட்னி புறப்பட இரண்டு மணி நேரம் தாமதம்,மும்பையில்.இரவு 0930 க்கு பிளேன் கிளம்பியது .சுமார் 11 மணி நேர விமானப் பயணம். நடு நடுவே சிறிதே மூச்சுச் திணறல் .ஏசி ஒத்துக்கலை. துணைவியாருக்கு சொன்னால் 'கவலை படுவார்களே', என சொல்லவில்லை.

"முச புடிக்கிற  நாய் மூஞ்சைப் பார்த்தாலே தெரியும்", அப்பிடின்னு சொலவடை சொல்லுவாங்க.அவங்களுக்கு என்னுடைய சங்கடங்கள் புரிந்து, மாத்திரைகளையும், தைரியத்தையும் ஊட்டினாங்க .முப்பத்தைந்து வருட தாம்பத்தியத்தில் 'என்னை எப்படி சமாளிப்பது எனபது அவர்களுக்கு கை வந்த கலை' .

'அப்படி, இப்படி' ன்னு,எப்பிடியோ சிட்னி வந்து சேர்ந்தோம் . பாஸ்போர்ட் எல்லாம் பரிசீலித்து விட்டு பெட்டியை திறந்து காண்பிக்கச் சொன்னாக. பெட்டியில் ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் ஒன்பது மஞ்சள் கிழங்குகள் , கம்பீரமாய் .உருண்டையாய், பொக்கை,போரை இல்லாமல் .திருமண சடங்குகளுக்காக கொண்டு வந்திருந்தோம். 'ஏன் ?' , இதை அறிவிக்க வில்லை?., என கேள்வி மேல்,கேள்வி கேட்டு வறுத்து எடுத்தார் அந்த சுங்க அதிகாரி .மன்னிச்சுக்குங்க .என் தங்கை மகள் திருமணம் என்று கூறி அழைப்பிதழ்   காட்டினேன்.மேலும்   எங்கள் ஊர் திருமணச் சடங்குளில் தேவைப் படுகின்ற ஒரு மங்களப் பொருள்  அப்பிடின்னேன் .

 "அப்படின்னா என்னான்னு?."  பக்கத்தில் இருந்த சர்தார்ஜியைக் கூப்பிட்டார் .அவரிடமும் நிலைமையை விளக்கினேன் .ஏங்க!, உங்களிடம் கொடுத்த படிவத்தில், ஏன், நீங்கள் இதை எழுதலைன்னு வருத்தப் பட்டார்.சர்தார்ஜி.  "ரொம்பவும் விவாதம் பண்ணாமே, குப்பைத் தொட்டியிலே போட்டிடறேன்னு சொல்லிடுங்க", என்றார். இவ்வளவு சீரியஸ் ஆக, இதை எடுதிப்பிங்கன்னு, தெரியலே. ' "அனுமதிக்கலேன்னா,  குப்பைத் தொட்டியிலே போட்டு விடுறேன்னு " ,  மிகவும் பவ்யமா  சொன்னேன். கொஞ்சம் சாந்தமாய்க் கேட்ட அவர் " சரின்னு" , சொல்லி, அந்த மஞ்சள் எல்லாத்தையும் குப்பைத் தொட்டிக்குள்ளே தூக்கிப் போட்டுட்டார், ரொம்ப கூலா .

இந்த அனுபவம் ஒரு பெரும் படிப்பினை.இந்த முறை பயணத்தில்அந்த அனுபவம்  மிகவும் உதவிற்று. எப்படின்னு, கேக்குறிங்களா. அதையும் சொல்லி முடிச்சுடறேன் .அதுக்கு ஒரு பதிவு எழுதறது அவ்வளவு சிலாக்கியமின்னு, தோணல.

கோவிச்சுக்காதிங்க. கொஞ்சம் முன் கதைச் சுருக்கம் அவசியம், இந்த இடத்திலே. உங்களுக்கு கண்ணு சொக்குதுன்னு,  நல்லாவே தெரியுது .எழுதுற ,எனக்கும் தான்.

நவம்பர் 21 - ம் தேதி, தஞ்சையில் இருந்து துணைவியுடன்   புறப்பட்டு, விமானம் ஏறி , தனியே திருச்சியில் இருந்து, சிங்கப்பூர் வந்து சேர்ந்தேன் . வயது முதிர்ந்த தந்தையை கவனித்துக்   கொள்ள வேண்டி, என் பிரியசகி , இந்த முறை என்னுடன் வரலைங்க .ரொம்பவே  'மிஸ்', பண்றேன் ..

மகள் வீட்டிற்க்கு டாக்ஸி பிடித்து, வந்து சேர்ந்தபோது மணி இரவு ஏழரை. ஐந்து நாள் கழித்து, நவம்பர் 25 - ம தேதி இரவு பத்தரைக்கு, மெல்பர்ன் செல்லும் விமானத்தில், நான் பேரன் பேத்தியுடன், பயணம் செய்ய ஏற்பாடு .பேரனும் பேத்தியும்  பாடடி வீட்டில் இருந்து 25 - ம் தேதி மும்பையில் விமானம் ஏறி, அன்று  இரவு ஆறரை மணிக்கு, சிங்கப்பூர் 'சாங்கி ஏர்போர்ட்', வருவார்கள் . அங்கேயிருந்து நான் அவர்களை அழைத்துக் கொண்டு 'மெல்பர்ன்' செல்ல, எங்களை அனுப்பி விட்டு 'பெர்த்' (Perth  ) செல்லும் விமானத்தை என் மகள் பிடிக்க வேண்டும். மகளை ஒரு வாரம் பெர்த்தில் வேலை செய்யச் சொல்லி ஆபீஸ் உத்தரவு.

ஆளுக்கு 40 kg லக்கேஜ் புக் பண்ணியிருந்தோம் .மொத்தம் 17 உருப்படிகள் .நான்கு   லக்கேஜ் மகள் எடுத்துக் கொண்டார் .மீதி 13  ஐ  நாங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் .கூட்டிக் கழித்தால் சுமார் 30 kg அதிகம் .திரும்பவும் அவசர அவசரமாய் எக்ஸ்ட்ரா லக்கேஜை மூட்டைக் கட்டி, ஏர்போர்ட்ல எங்களை வழி அனுப்ப வந்த நண்பர் மாறனிடம் கொடுத்து அனுப்பினோம் .


எங்களுடைய கனமான ஏழு லக்கேஜ், கவுன்டரில்  'புக்' பண்ணிவிட்டு, கையில் இரண்டு லேப் டாப், நாலு பிரீப் கேஸ், ஆளுக்கொரு கம்பளிக் கோட்டு, என திக்கு முக்காடி விமானத்தில் ஏறினோம் எங்களுக்குப் பின்னாடி "பெர்த்" விமானத்தில் போக வேண்டிய என் மகள் சிறிது முன்னாடியே பறந்து விட்டாங்க.என் என்றால் வழக்கம் போல் எங்க விமானம் ,லேட்டுங்கோ .  

இந்த முறை முன்னெச்சரிக்கையாய் மசாலா சாமான்,மருந்து மாத்திரை( டாக்டர் சீட்டுகளுடன்), ஸ்வீட்,வத்தல்,வடாம்,   எல்லாம் தனித் தனியாய் ,' பேக் ' பண்ணி,  குப்பையில் போட தயாராய், மனசை திடப் படுத்திக் கொண்டு வந்தேன் கொஞ்சம் நகைகள் கையில், சூட்கேசில். சுமார் பத்து மணி நேரம் பயணம். காலையில் விமானம் தரை இறங்கறதாத் தெரியலே பைலட் ரவுண்டு கட்டுறார் .சன்னல் வழியா மழை கொட்டுறது, தெரியுது . எனக்கு நிறைய கதைகள் படிக்கிறது வழக்கமா?. விமானத்தில், ஏதோ புட்டுகிடுச்சோ, அப்படின்னு ஒரே காப்ரா ஆயிடுச்சு.  ரொம்ப என் அதீதமான  கற்பனைக்கு இடம் கொடுக்காமே விமானம் "துல்லாமரின்", ஏர்போர்ட் லே, மிக வழுக்கலான தரையிலே, ஒரு லௌகிக டயத்திலே இறங்கிடுத்து .என் பேத்திக்கோ தூக்கம் கலையல.அவளோட "கோட்டா", இரண்டு லக்கேஜ், அவ அதை  தூக்காம ஒன்னும் பண்ண முடியாது. கெஞ்சிக் கூத்தாடி, ஒரு வழியா தர, தர ன்னு எல்லாத்தையும் இழுத்துக் கிட்டு பஸ்ஸில், சொட்டுன  மழையிலே ஏறினது ... புனர்ஜென்மம் தான்.. போங்கோ.

கொஞ்சம் புத்திசாலித்தனமா, அசட்டு பிசட்டுன்னு இல்லாமே, இந்தத் தடவை விலாவாரியா படிவத்தில் கொண்டு வந்ததை ' டிக் ' பண்ணிட்டேன். பிரயாணிகள் திமு, திமுன்னு, ஒரே  திருவிழாக் கூட்டம் மாதிரி. வரிசையிலே கையும், காலும்  கெஞ்ச நிக்கிறோம் . 'வெல்கம்', ன்னு சொல்லி பாஸ்போர்ட் வாங்கி, ஸ்டாம்ப் பண்ணிட்டா.

அடுத்து எங்களோட, மூட்டை, முடிச்சை சேகரிக்க போனோம் பேத்தி காயத்ரி, தூக்கத்தில் இருந்து இன்னமும் விடுபடலை. தோள்   மேலே சாஞ்சு தூங்கித், தூங்கி  வழியறா. சுத்தி ,சுத்தி கடைசியிலே அஞ்சு பெட்டி தான் வந்தது .எல்லாம் கொஞ்சம் 'மெகா' சைஸ். ஆள் ஏறி அமுக்கியது . மீதி ரெண்டு அட்டைப் பெட்டியை காணலை .நான் நின்னு கிட்டே இருக்கேன் .என் பேரன், ராஜன் "தாத்தா, தாத்தா", கன்வேயர் பெல்ட் நின்னுடுச்சு எல்லோரும் போயிட்டா. 'கவுன்ட்டர்' லே விசாரிங்க, என்றான். சரின்னு, அரக்கப் பரக்க போயி, ரெண்டு அட்டைப் பெட்டி காணும் ன்னு சொல்ல "தோ  பாரு" , அங்கே இருக்குன்னு 'அசரீரி' மாதிரி சொல்லுறாரு .உடையக் கூடிய சாமானெல்லாம் தனியே அனுப்புவாளாம்.எங்கள் பெட்டி மாத்திரம் ,கேட்பாரற்று, தனியாய் அனாதையாய் ..பேஷ் ,பேஷ்...

ஆளுக்கு ஒரு தள்ளு வண்டி சகிதம், கழைக் கூத்தாடி போல  பாலன்ஸ் பண்ணிக் கொண்டு,கை காட்டிய இடத்துக்குப் போய் நின்றோம் . 'டென்சிங் ,ஹில்லாரி', கணக்கா ,இமய மலையில் ஏறினா மாதிரி .நான் எழுதி கொடுத்த படிவத்தை கையில்  வைத்துக் கொண்டுசுங்க அதிகாரி," எங்களை மேலே,கீழே பார்த்தார்" ,. வாத்தியார் கொடுத்த செய்யுளைப்  பாராயணம் பண்ணி, என்ன கேட்டா , என்ன சொல்லணும்?, அப்பிடின்னு யோசித்து வைச்ச தெல்லாம்,அந்த சுங்க அதிகாரிய பார்த்த உடனே , நொடியில் கணினியில்  delete பட்டனைத் தட்டின மாதிரி,  erase  ஆயிடுத்து .

சுங்க அதிகாரி ,"பெட்டியில் என்ன ? " ,என்று வினவ , சுவிட்ச் போட்டா மாதிரி, ."வீட்டுக்கான உணவுப் பொருட்கள் ", அப்படின்னு சொல்லி, உடனே ஒருபெரிய மூட்டையை எடுத்துப் போட்டேன். எல்லாம் தெளிவாய்த் தெரிகின்ற பிளாஸ்டிக் பையில். அடுத்த மூட்டையை  கையில் எடுக்கு முன்,ஓசையில்லாம, "ஓடிப் போங்கன்னு"  கண் ஜாடை காட்டிட்டாரு .அவரு கை நீட்டிய அடுத்த மேசைக்குப் போனோம். அங்கே, ஒரு ஆஜானுபாகுவான, அதிகாரி அம்மா . மென்மையாய் "எவ்வளவு மதிப்பு பொறுமான நகை, ரசீது இருக்கான்னு", கேட்டாங்க .என்னுடைய படிவம் பார்த்து, இரண்டு குழந்தைகளும் இங்கே நிரந்தரவாசி ( Permanent Resident )என்பதால் ஆளுக்கு நானூறு டாலர் மதிப்பு உள்ள பொருள் கொண்டு வரலாம், நீங்கள் 'டிக்ளர்' பண்ணத் தேவையில்லை என்றார்கள் .

தன முடிவில் மனம் தளராத விக்ரமாதித்தன் மாதிரி, உண்மையைத் தவிர வேறதையும் சொல்வதில்லை  என்று உறுதியாய் இருந்த நான், ரசீது இல்லை,இது எங்கள் குடும்ப நகை ..என்றேன் .ஒரு ஆயிரம் டாலர் மதிப்பு இருக்குமா ?. எனக் கேட்க ."இன்னும் கொஞ்சம் கூட இருக்கும்", என்றேன். ஆயிரத்தி ஐநூறு மதிப்பு போட்டுக்கவா என பேரம் பேசினார்கள். சரிங்கன்னு சொல்லிட்டு.. விட்டோம் சவாரி..

எங்களைப் போலவே வாசலில் களைத்துப் போய் காத்திருந்த மாப்பிள்ளையுடன் 'மினி லாரி'..சாரி 'வேன்'  பிடித்து வீடு போய்ச் சேர்ந்தோம் ..

ரொம்ப களைப்பா இருக்குங்க ..மீதி கதையை அப்புறம் சொல்றேனுங்க ..

வணக்கங்க ..  

நன்றி :கூகுள் படங்கள் .                                    

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

திசை மாற்றிய திருப்பங்கள் .2

கவனம் கவர்தல் ..(Get  Noticed ) 

சுவாமி விவேகானந்தரின் 149 - வது பிறந்த நாள். இந்த சனவரித் திங்கள் 12 ம் தேதி , இளைஞர் தினம் . இந்திய தேசத்தின் நிகழ்காலமும், எதிர்காலமும் இவர்களின் கரங்களில்.
" நிமிர்ந்து நில் , வீரனாக,வலியவனாக உலகை நீ எதிர் கொள் ." நீ என்னவாக வேண்டும், யாராக வேண்டும்",என்பதை தீர்மானிக்கும் சக்தி, உன் கையில் தான் என்றார், மகான் விவேகானந்தர்.

ருவர் நிமிர்ந்து நின்றாலே, அவரிடம் மற்றவரை விட, ஏதோ ஒரு மேம் பட்ட சக்தி இருக்க வேண்டும், வித்தை வலிமை , அறிவு, அழகு பணம் ,படை என அடுக்கிக் கொண்டே போகலாம். கூட்டத்தில், "இரும்பைக்  கவர்கின்ற காந்தம்", மாதிரி, தம்மைத் திரும்பப் பார்க்க வைக்கும் தனித்துவம் பெற்றவர், இம்மக்கள்.வெற்றியின் முதல் அடிப்படையே ,முதலில் நாம் நம்மை, நம் திறமையை வெளிப்படுத்தும்( Get Noticed ) ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.வேலைக்கான தேர்வு, பெண் பார்க்கும் படலம்,பணி செய்யும் இடம் எதுவாகிலும், முதல் தேவை, "கவனம் கவர்தலே ". உலகில் அனைத்து விளம்பரங்களின் அடிப்படை உத்தியே , இது தான்.

ஏன் ?.விலங்குகளைப் பாருங்கள். ஆண் மயில் தோகை விரித்து ஆடுகிறது, பெண் மயிலைக் கவர. பெரிய மிருகங்கள் முட்டி மோதி, பலம் காட்டி , முதன்மை பெறுகின்றன தம் இனத்தில் .  

முதலில் ஏன், எதற்காக, யார் கவனத்தைக் கவர்தல் வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.அதற்க்கு தேவையான திறமை, ஆற்றல் நம்மிடம் உள்ளதா ?, என சுய பரிசோதனை செய்து கொள்ளல் அவசியம் .நம் பலம், பலஹீனம் அறிந்து முன்னதைக் கூட்டி, பின்னதை குறைக்க முயற்சி செய்யவும். எக் காரணம் கொண்டும், எந்த சூழலிலும் மனம் தளராமல், விழுந்தாலும் எழுந்து  மீண்டும் பயணம் தொடரும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள். "எழுதுவது எல்லாம் சுலபம்",இது எப்படி நடை முறையில் சாத்தியம் ,என்று உங்களுக்கு வினா எழலாம் .
நிறைய உதாரணங்களை வெற்றி பெற்றவர் பற்றிய புத்தகம்  மூலமோ, நிஜ வாழ்கையில்  உச்சாணிக் கொம்பில் இருக்கிற வரை பார்த்தோ நாம் தெரிந்து கொள்ளலாம்.அப்புறம் எதுக்கு இந்தக் கட்டுரை, இடிமுழக்கம் அப்பிடின்னுதோணுதா ?..
யார் யாரையோ உதாரணம் சொல்வதை   விட, என்னுடைய நேரடி அனுபவத்தைப் பகிர்தல், இன்னும் சிறப்பாக   இருக்கும் என்பதால் தான்.
சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால், தொலைக் காட்சி நிலையத்தில் பொறியியல் இணை இயக்குநராக பணி புரிந்த திரு.வாசன் அவர்கள் ,விருப்ப ஓய்வு எடுத்துக்க் கொண்டு சவுதி அரேபியா தொலைகாட்சி கட்டமைப்பில், ஒரு ஒலி பரப்புப் பொறியாளராய்(Transmitter Engineer ) பணியில் சேர்ந்தார். இந்தக் கட்டமைப்பில் நிறைய வெளி நாட்டுப் பொறியாளர்கள் பணி புரிதல் வழக்கம் .எகிப்து ,சிரியா ,சூடான் போன்ற  அரேபிய தேசத்தவரும், பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரர்களும்,     பாகிஸ்தான், இந்தியா போன்ற ஆசிய நாட்டினரும் உள்ளூர்காரர்களுடன்  பணி புரிவர் .அங்கு பொறியியல் தலைமைப் (Project  Manager ) பொறுப்பில் ஒரு அமெரிக்கர்   இருந்தார் . அவரது பெயர் கிர்க் வால்கர் ( Kirk  Walker ) என நினைவு . எல்லா  பொறியாளர் களுக்கும் ,வருடத்திற்கு ஒரு மாதம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை .தாய்நாடு போய் வர. விமான டிக்கெட்டும் கிடைக்கும் .எல்லோரும் ஒரே சமயம் விடுப்பு எடுக்க இயலாது .ஒருவர் போய் திரும்பியவுடன் அடுத்த நபர் என்ற சுழற்சி முறை .
இதனால், புதிதாக சேர்ந்துள்ள பொறியாளரை, விடுப்பில் சென்றவர் இடத்திற்கு,பணி புரிய  அனுப்புவர் .இது புதிய நபரின் வேலைத் திறனை சோதிக்கவும், பிறகு பொருத்தமான  இடத்தில அவரை பராமரிப்புப் பணியில் தக்க வைக்கிற முறை. நிறுவனத்திற்கு ஒத்து வரவில்லை, எனில் ஈவிரக்க மின்றி, கழட்டி விடுதலும் உண்டு .

சவுதியில் வேலைக்குச் சேர்ந்த புதிலில், இது மாதிரி பல ஒலி. ஓளி பரப்பு கேந்திரங்களில் திரு.வாசன் அவர்களும் வேலை செய்ய நேரிட்டது. மேலும் ஒவ்வொரு பொறியாளரும், சுமார் நூறு கி .மீ எல்லைக்குள் உள்ள நான்கு அல்லது ஐந்து நிலையங்களைப் பராமரித்தல் வேண்டும் .
இந்தக் கேந்திரங்களில் டி.வீ மற்றும் பண்பலைக்கான ஒலி, ஒளி பரப்பிகள் உண்டு. சயாமிஸ் இரட்டையர் போல, தானியங்கி வசதிகளுடன். ஒரு கருவி பழுதானால் அடுத்தது, உயிர் பெற்று, ஒளிபரப்பில் தடங்கல் இன்றி, உடனே செயல் படும் வகையில் ஏற்பாடுகள் .பொறியாளர் மத்தியமாய் ஒரு பெரிய  கேந்திரத்தில் நிலை கொள்ள, மற்ற நிலையங்களை தொழில் நுட்ப உதவியாளர் ஒருவர் ( Technician  ) நிர்வகிப்பார். 
பொறியாளருக்கு தங்க இடமும் , காரும் தந்து விடுவர்.தானே காரை ஒட்டிக் கொள்ள வேண்டியதுதான் . எந்த நிலையத்தில் பழுது  என்றாலும், தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்று பழுது நீக்கி ஒளி, ஓலி பரப்பி அதனுடன் தொடர்புடைய அனைத்து உப கரணங்களையும் தயார் நிலையில் வைத்திருப்பதே , இவரின் தலையாய பணி.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ,இத்தாலி ,ஜெர்மனி என கதம்பமாய் பல நாட்டுக் கருவிகள் .இது தவிர பாலை வனப் பிரதேசத்தில் மிகவும் சின்ன நகரங்களில் சூரிய சக்தியில் இயங்குகின்ற அமைப்பு (Solar  powered Transposers ). எல்லாக் கேந்திரங்களையும் தேவையானால் தலைமை இடத்தில இருந்து இயக்குகின்ற மின்னணு வசதிகள் . நுண்ணலைத் தொடர்புகள் (Microwave Links )  மொத்தத்தில் நிறைய  இடியாப்பச் சிக்கல்.ரொம்பவும் பின்னிப் பிணைந்தது.     

ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டு ,ஓலி,ஓளி பரப்பில் ஏற்படும் தடங்கல் களுக்கு கடும் அபராதத்தை, பராமரிக்கும் நிறுவனம் , சவுதி அரசாங்கத்திற்கு தர வேண்டியிருக்கும். அங்கெல்லாம் நிலையங்களைப் பராமரிக்கின்ற வேலைகள் ,தனியார் நிறுவனங்களால், ஒப்பந்த அடிப்படையில் செய்யப் படும் .
இப்படிப் போன புதிதில், பல நிலையங்களில் வேலை செய்த திரு வாசன் அவர்கள் ,இந்த பலதரப் பட்ட கருவிகளில் ஏற்படும் கோளாறுகள், முடிந்த வரை அவற்றை அறவே தவிர்க்க அல்லது குறைப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் ,ஓலி பரப்பப் படும் நிகழ்சிகளின் தொழில்நுட்பத் தரம், இன்னும் இந்தத் தரத்தை மேம்படுத்தக் கூடிய வழி முறைகளை ஆய்வு செய்தார். இத்துடன் விலை வாய்ந்த உதிரி பாகங்களை தேவைகேற்றபடி பயன்படுத்தி நேரம், பொருள் விரயம் தவிர்க்கும்  வகைகளையும் பற்றி அறிக்கை தயார் செய்து கூடவே விவரமாய் தன்  யோசனைகளையும் எழுதி நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தார்.
இவர் அறிக்கையை நன்கு ஆய்ந்த நிறுவனம் உடனே இவரை அழைத்து பேசி,இவருக்கு  தரக் கட்டுப்பாடு பொறியாளராய் (Quality  Control Engineer  ) ஆக  பதவி உயர்வு அளித்தது .அப்புறம் அங்கு வேலை செய்கின்ற பன்னாட்டு கருவிகள், பயன்பாடு, பராமரித்தல், மாற்று ஏற்பாடுகள் ,என்பன பற்றி நூற்றுக்கு மேற்ப்பட்ட சுற்றறிக்கைகள். ஒளிபரப்புகளின் திறனையும் தரத்தையும் மேம்படுத்தும் விதத்தில், கடைப் பிடிக்க வேண்டிய வழி முறைகள் யாவும் நடை முறை படுத்தினார் . படிப் படியாய் உயர்ந்து, நிர்வாகம் தலைமைப் பொறுப்பைத் தர விழைந்த போதும், அதற்க்கு ஈடான  தொழில் நுட்ப மேலாளர் (Technical Manager )  என்ற பதவில் நீண்ட காலம் பணி புரிந்தார்.
செய்யும் தொழிலில் இவரது ஆர்வம் ,உழைப்பு, அணுகு முறை பன்னாட்ட வரையும்  அரவணைத்துப் விஷயங்களை தெளிவாக்குகின்ற ஆற்றல்,  தான் கற்றவற்றை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டது ஆகியவையே இவரது உயர்வுக்கு அடிப்படை என்றால் மிகையாகாது. இவர் என் காலத்தவர். என்னை அங்கே வேலை செய்ய தேர்ந்து எடுத்தவர். சுமார் ஆறு ஆண்டுகள் சவுதி தொலைக் காட்சி நிலையக் கட்டமைப்புகளில் நானும்  பணிபுரிந்தவன். அதற்கு முன் 28 ஆண்டு காலம் அகில இந்திய வானொலி மற்றும் தொலைகாட்சி நிலையங்களில் நான், பணிபுரிந்தேன் என்பதே என் கதைச் சுருக்கம்.
இப்போது உலக அரங்கில் ஒளி வீசும் மற்றுமொரு தமிழர் . திரு .கல்ராமன் அவர்கள்,தெரு விளக்கில் படித்து தற்போது அமெரிக்கா வில் 'Global Scholar  ' என்ற நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளார் .  'அமேசான்' ,' காஸ்ட்கோ' ஆகிய பெரும் ஸ்தாபனங்களில் வேலை செய்தவர். இந்தியாவில் குழந்தைகள் கல்வி கற்றலுக்கு பல சீரிய தொண்டுகளைச் செய்து வருகிறார் ..அவருக்கு ஏற்பட்ட சோதனைகளும் வெற்றி கண்ட விதமும் பற்றிய காணொளி நம் அனைவருக்கும் மற்றுமொரு எடுத்துக்காட்டாய்,இருக்கும் என நம்புகிறேன்.
.



ஒரு சின்ன ஒரு உதாரணத்தோடு இந்தக் கட்டுரையை முடிக்கிறேன் .

ஆழ்கடலில் காட்(Cod ) என்ற ஒருவகை மீனினம் ஒரு தடவையில் பல லட்சம் முட்டை இடுதுங்க .யாருக்கும் தெரியறதில்ல ..ஆனால் நம்ம வீட்டு பெட்டைக் கோழி ,கூரை ஏறி "கொக்கரக்கோ" ,"கொக்கரக்கோ" அப்படின்னு ,மதியம் போடப் போற முட்டைக்கு ,காலையில் இருந்து விளம்பரம் பண்ணுது .

நாம் வளர்த்துக் கொண்ட ஆற்றல்களை சரியாய் வெளிப் படுத்தவும், முன்னேறவும் பயன் படுத்திக் கொள்ளணுங்க.                              
                                      ( Toot Your  Horns ) 
போராடி வெற்றி பெறுதல் தான் வாழ்க்கை . தலை நிமிர்ந்தால், தடங்கல் யாவும், தவிடு பொடி ஆக்கிடலாம் .நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, முயற்சி ,உழைப்பு நம்மை நிச்சயம்  வெற்றி என்னும் சிகரத்திற்கு இட்டுச் செல்லும் .

நன்றி :கூகுள் படங்கள் ,யு ட்யூப் 

  

திங்கள், 9 ஜனவரி, 2012

ஆலய தரிசனம் ..1.

ஆலய தரிசனம் ..1.

ஸ்ரீசிவா - விஷ்ணு கோவில.

இன்று  சனிக் கிழமை (07 /01/2012 ), வார விடுமுறை தினம். குடும்ப சகிதம், மெல்பெர்ன் ( Melbourne )  நகரத்தின் மற்றொரு கோடியில் காரும் டௌன்ஸ் (Carrum  Downs ) -ல் உள்ள ஸ்ரீசிவா -விஷ்ணு ஆலயத்திற்கு சென்றோம்..

க்லென்வேவர்லி(Glen  Waverley ) -ல் பஸ் பிடித்து, டான்டீனங் (Dandenong )  சென்று, மற்றுமொரு பஸ் மாறி,, சுமார் முப்பது ௦ கிலோ மீட்டர் பயணம் செய்து கோவில் சென்றடைந்தோம்.




வழி நெடுக நேர்த்தியான வீடுகள், போட்டி போட்டுக்   கொண்டு பூத்துக் குலுங்கும் தோட்டங்கள், வெள்ளை,சிகப்பு , மஞ்சள், நீலம் என வித விதமாய் கதம்ப மலர்கள், ஓட்ட வெட்டப் பட்டு, ஒய்யாரமாய் படுத்திருக்கும் பச்சைக் கம்பள புல்வெளிகள், கரு நாகம் போல் நீண்ட சாலைகள்,வயல் வெளியில், பட்டுப் போல் உடல் மின்ன, பயிர் தின்னும் பசுக்கள் கூட்டம், ஆங்காங்கே சில குதிரைகள், என 'ஆஸ்திரேலிய', கண்டம் எட்டிய தூரம் கண்களுக்கு  குளுமையூட்டியது.

பிரதான சாலையில் இருந்து விலகி,  சுமார் நானூறு மீட்டர் தூரத்தில், கம்பீரமான இரு கோபுரங்களுடன், பெரிய நிலப் பரப்பில் அழகாய் கோவில்.. .ஊருக்கு ஒதுப் புறத்தில், அமைதியான சூழலில்.




மிகுந்த   பக்தியும், தொண்டுள்ளமும்  நிறைந்த இந்து சொசைட்டி(Hindu Society) அன்பர்கள், மற்றும் பலரின்  முயற்சியில், பெரும் பொருட் செலவில் எழுப்பிய கோவில். கடல் கடந்த கண்டத்திலும் காப்பாற்றப் படுகின்ற, நம் கலாச்சாரம். ஆஸ்திரேலிய கட்டிட கட்டுமானத் திறனில், இந்துப் பாரம்பரியம் இம்மியும் பிறழாமல், நிர்மாணிக்கப்பட்ட திருத்தலம்.தெய்வச் சிலைகள் யாவும் மிகவும்அற்புதமாய் வடிக்கப் பட்டுள்ளன .மொத்தம் 32 மூர்த்திகள் உள்ளதாய், கோவில் பற்றிய குறிப்பு கூறுகிறது.

முதலில் " விக்னம் எல்லாம் விலக்கிடும் ", விநாயகப் பெருமானைத் தொழுது, உள்ளே நுழைகிறோம். சடுதியில் மனம், சலனமின்றி அமைதி அடைகிறது. திடீரென பத்தாயிரம் மைல் தாண்டி, நம்ம ஊர் கோவிலில் இருக்கும் பிரமை, கூடியிருக்கும் சகோதர சகோதரிகளை, ஒருமித்து பார்த்த போது.

ஓயாமல் கரை தழுவி, தன் கதை சொல்லும், கடல் அலை போல, பிறந்த மண்ணின் எண்ணங்கள், புகுந்த நாட்டில் புளகாங்கிதம் அடையச் செய்கிறது.பள பளக்கும் மரத்தில் பளிங்கு மாதிரி தரைத் தளம்.மந்திரங்கள், மங்களஇசை,ஓங்கி ஒலிக்கின்ற மணிச்சத்தம்..உள்ளத்தை உருக்குகின்றன, இந்த இன்னிசை  நாதங்கள்.சிவனும்,திருமாலும் மற்றும் ஏனைய தெய்வங்களும் அருள் பாலிக்கின்றனர். நாங்கள் போன போது, அய்யன் சிவனுக்கும் அன்னை விசாலாட்சிக்கும் அபிஷேக ஆராதனை.அனைவரும் மெய்மறந்தனர். மிக அருமையான, ஆனந்தமான தரிசனம். .

மன்னிக்கவும் ..இந்த இடத்தில் சிறிதே விலகி ஒரு சின்ன கவனச் சிதறல் ..
.
பிரகாரம் சுற்றிவிட்டு வந்து, அமர்ந்து இருக்கையில், புது நண்பர் ஒருவரைச் சந்தித்ததை சொல்லியே ஆகவேண்டும். நான் பணி புரிந்த காலத்தில், என் மேலாளரும், நெருங்கிய நண்பருமான திரு .தியாகராஜன் அவர்களுக்கு மின்னஞ்சலில் புத்தாண்டு வாழ்த்துக்கள் அனுப்பினேன்.

பதில் கடிதத்தில், நான் மெல்பெர்ன் (Melbourne) வந்திருக்கும் தகவல் தெரிந்து, இங்கிருக்கும் அவரது ஆத்ம நண்பர் திரு. ராமநாராயணன் அவர்களின் விலாசமும், தொலைபேசி எண்ணும் அனுப்பி வைத்தார். நான், திரு.ராமநாராயணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க, ஞாயிற்று கிழமை இல்லத்திற்கு வருமாறு அழைத்திருந்தார்.மேலும் பேசும் போது " சிவன் கோவிலுக்கு சனிக்கிழமை போக எண்ணியுள்ளேன்", என்றார்.

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை. திரு. ராம நாராயணன்  பல ஆண்டுகள், அமெரிக்காவில் பணி  புரிந்து, இரண்டு மாதம் முன்பாக, வேலை நிமித்தம் இங்கு வந்துள்ளார்.சிங்கப்பூரில்  பணி புரிந்த என் மகளும், மருமகனும், குழந்தைகளுடன் நவம்பர் கடைசியில் இங்கே குடியேற்றம். மூன்று  மாத விசாவில்,கொசுறாய் ஒட்டிக் கொண்டு அடியேனும் வருகை.

பிரகாரத்தில் அமர்ந்திருக்கையில் என் மகள் "காலெண்டர்" வாங்கும் இடத்தில, "அப்பா, அம்மா, பையன்", என மூவர் உள்ளனர். ஒருவேளை அது "திரு. நாராயணன் சார் ",ஆக இருப்பாரோ? ". என்று வினவ, திரும்பிப் பார்த்த நான் "அவர்தான்", என்று கூறினேன். "அது எப்படியப்பா ? அவ்வளவு உறுதியா சொல்றிங்கன்னு கேட்க .

ஒன்னுமில்லையம்மா ..என்னை மாதிரி தொண்டு கிழமெல்லாம் முக நூலில் (Facebook ) -ல இருக்காங்க. என்னை விட, இளைய அவரும் Facebook  இல் நிச்சயம் இருப்பாரு, என தேடித்  பார்த்தேன். இல்லை. ஆனால் Linked - In  என்ற சமூக தளத்தில்  அவரு இருக்காரு ..போய்ப்  பாருங்கன்னு .. அது சொல்லிச்சு அங்கே போய் பாத்தா ..  பக்கம்.. பக்கமா கொட்டுச்சு... பத்தாததுக்கு அவர் போட்டோவும் ..போட்டு இருந்தாரு..என்றேன்.

வாட்சன்-ஷெர்லாக் ஹோம்ஸ்..கதை மாதிரி ஆயிப் போச்சு. நாங்க, அவரை சந்தித்த விஷயம். அப்புறம் என்ன..காது வலிக்கும் அளவுக்கு கலந்துரையாடி..இதிலே என் பேரனும் அவர் மகனும்..பச்சக்கின்னு ஓட்டிகிட்டு..அவுங்க உலகத்துக்கு போய்ட்டாங்க.பிறகென்ன .. ஒன்னா கோவில் கான்டீன் ல சாப்பிட்டு, ஒன்னா பஸ்  ஏறி, தனித் தனியா வீட்டுக்குப் போனோம்.

புது வருடம், புது இடம், புது நட்பு. கிட்டத் தட்ட.பிசிராந்தையார் ரேஞ்சுக்கு...வைச்சிக்குங்களேன்..பழகலாம் ..பழகிப் பார்க்கலாம்..நட்பு ..நட்புதாங்க .

கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டுடேங்க..மீண்டும் ..


  

இந்தக் கோவிலில் நூலகம் ஒன்று உள்ளது. இந்து மதம் பற்றிய வகுப்புக்களும் நடை பெறுகின்றன,மிக தூய்மையாகவும் நன்றாகவும் பராமரிக்கப் படுகிறது.இந்த அரிய,பெரிய கோவிலைக் கட்டியதில் பலரின் உழைப்பு தெரியுதுங்க. விருட்சமும் வேர்களும் தாய் மண்ணில்... விழுதுகள் இங்கே தழைக்கின்றன.இவர்கள் அனைவருக்கும், என் சிரம் தாழ்த்திய வணக்கங்கள்.ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கான பிரார்த்தனைகளும்..

என்றும் வாழ்க வளமுடன்..  

நன்றி : கூகுல் படங்கள் ,யு ட்யூப்           

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

திசை மாற்றிய திருப்பங்கள் ...1.

திசை மாற்றிய திருப்பங்கள் ...1.

பெற்றோர் கனவு ...

புது வருஷம் பிறந்து விட்டது .வாழ்க்கைப் புத்தகத்தில் மற்றுமொரு புரட்டப் பட்ட  பக்கம் .கடந்து வந்த பயணத்தில் இன்னொரு மைல் கல்.

புல் மேய்ந்த காராம் பசு போல் மனம் பழைய நினைவுகளை அசை போடுகிறது சந்தித்த மனிதர்கள்,எதிர் கொண்ட போராட்டங்கள், ஏற்ப்படுத்திய மகிழ்ச்சி, வலி, துயரம், கனவுகள், நனவுகள் என... கரை புரண்டு வரும் புதுப் புனலில்  அடித்து வரப் படும் இலை,தழை போல...
நுரைத்து வரும், ஆற்றுச்  சுழலில் குமிழியிட்டு கிளம்பும்  கொப்புளங்கள் போல்....
நினைவுகள் ...பீறிட்டு கிளம்புகின்றன.....
ஒவ்வொருவரும், தாம், தம் வாழ்வில் பல சமயம்சந்தித்த மனிதர்களால், படித்த புத்தகங்களால்,குறுக்கிட்ட நிகழ்வுகளால்.பெற்ற அனுபவங்கள்....







இவர்களின்  வாழ்க்கைப் படகின் திசையை மாற்றி பல சமயம் பெரும் திருப்பங்களை ஏற்படுத்துகின்றன.

"என்னடா ?.", பெரிய பீடிகையாய் போடுகிறானே, என உங்களுக்குத் தோன்றலாம்.

நான் வாழ்க்கைக் கோலங்கள்-8. என்ற தலைப்பில் குழந்தைகள் வளர்ப்பு பற்றிய கருத்தை எழுதி இருந்தேன்.பெற்றோர் தம் கனவை குழந்தைகள் மீது திணிப்பது சரியா எனபது பற்றிய என் அனுபவமும்,அது பற்றிய சிந்தனை களும்.

என்னுடைய குடும்பத்தில், ஏழு குழந்தைகளில், சரியாய் நடுவில் பிறந்தவன். நாலாவதாய் பிறந்ததை கூறுகிறேன். "பிள்ளைகள் பெரும் செல்வம்", " சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்", மாடு மேய்க்க ஆள் தேவை,  எனப் பல காரணங்கள் கூறினாலும், அப்போதெல்லாம் சிகப்பு முக்கோணங்கள் புழக்கத்தில் இல்லாத காலம்."நாம் இருவர், நமக்கு இருவர்", என்று நம் அரசாங்கம் விழித்துக் கொண்டதற்கு முந்தைய கால கட்டம் .

விவசாயியான என் தந்தைக்கு, பட்டப் படிப்பு படித்த, ஒரு நண்பர் இருந்தார். ஓரளவே படித்த, என் தந்தைக்கு, பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு உரமூட்டியவர். அவர் அடிக்கடி," ஏதாவது ஒரு பிள்ளையை பொறியியல் படிக்க வைத்து விடு",என அறிவுறுத்துவார். இந்த அருள் வாக்கு  "எப்போதும் சொன்ன பேச்சு கேட்டு, அப்பாவியாய்,  தேமே", என்று இருந்த என் தலையில் விடிந்தது ...நான் சொல்றது 1960 -ம் வருடங்களில்.இன்றையில் இருந்து ,அரை நூற்றாண்டுக்கு முன்னால்.

பள்ளி இறுதிப் படிப்பை திண்ணை வாத்தியார், கிராமம் ,சிறு நகரம் என, படிப் படியாய் தமிழில் படித்து கரை ஏறினேன் .புகு முக வகுப்பில் அனைத்தும் ஆங்கிலம். கண்ணை கட்டிக் காற்றில் விட்டார்போல ..பொறியியல் படிப்பிற்கு சரியாய் ஐந்து மதிப்பெண் குறைவாய் .கண் கசக்கினேன் ..

அப்புறமென்ன..படித்த அதே, குடந்தைக் கலைக் கல்லூரியில் இளநிலை பௌதீகம்.  தடங்கல் ஏதுமின்றி, இன்றி தப்பித்து வேலை தேடும் படலம். இப்போதைய தேசிய வங்கியில் எழுத்தர் (Clerk ) வேலை, அகில இந்திய வானொலியில் பொறியியல் உதவியாளர் ( Engineering Assistant ) என்ற வாய்ப்புக்கள்.

முன்னது ஊருக்கு பதினைந்து  கி.மீ அருகிலும், பின்னது அந்தமானில் கிட்டத் தட்ட ஆயிரம் கி.மீட்டருக்கு  அப்பாலும்.

நம்புங்க ..எவ்வளவோ சொல்லியும், அந்தப் பொறியியல் என்ற வார்த்தைக் காக, யார் தடுத்தும் கேளாமல்..முதல் முறையாக தந்தை பேச்சைத் தட்டி , கப்பலேறி கடல் தாண்டி 1971 -ல் அந்தமானில், வானொலி நிலைத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.

காதில் புகுந்த வண்டு மாதிரி "பொறியாளர் ",ஆகணும் என்ற வார்த்தை குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருந்தது.. சரின்னு, தாகம் தணிக்க A.M.I.E.,Grad.I.E.T.E.,. என்ற வகுப்புகளில் சேர்ந்து கணிசமான பாடங்களை,வெவ்வேறு  கால கட்டங்களில் பூர்த்தி செய்தேன்..பட்டங்களை எட்ட முடிந்தவரை முட்டினேன்...உதவிக்கு திரு.M.S.உதயமூர்த்தி அவர்களை அழைத்துப் பார்த்தேன் ..ஊக்கம் பெற வேண்டி, அவர் புத்தகங்களை படித்தேன்னு ...சொல்ல வர்றேன்.

அப்புறம் 1982- ல், என்னுடைய கீழ் வானத்தில், மெலிதாய் அரும்பியது,  ஒரு வெளிச்சக்கோடு. திருச்சி தேசியக் கல்லூரியில், ஆசிரியர்களுக்கென, மின்னணுவியலில்,பகுதி நேர முதுநிலை பட்டப் படிப்பு ஆரம்பிச்சாங்க. அடிச்சுப்  புடிச்சு,அரக்கப் பரக்க, அதிலே சேர்ந்தேன். என் துணைவியார் இரெண்டாம் குழந்தையை சுமந்த சமயம், அது. குடும்பத்தில்...நிறைய இக்கட்டுக்கள் .

அதிகாலை எழுந்து முதல் 'ஷிப்டு'' வேலையை முடித்து மாலை நேர வகுப்பு கள் போக வேண்டும். வீடு திரும்ப இரவு மணி ஒன்பது ஆகிவிடும்..பிறகு புத்தகங்களை எடுத்துக் கொண்டு, திருச்சி கண்டோன்மென்ட் பக்கத்தில், நீதி மன்ற வளாகத்தின் சுற்றுச் சுவருள் உள்ள சுடுகாட்டுப் பக்கம் படிப்பு..நள்ளிரவு வரை..முதுகலை பட்டம் பெற்றேன். மூச்சு வாங்கி விட்டது.

 இப்படித்தான் படிப் படியாய் உயர்ந்து, உதவி நிலையப் பொறியாளர் (Assistant Station Engineer) ஆனேன். இடையில்,நான் பணி புரிந்த தொலைகாட்சி நிலையத்தின் தயவினாலும், ஆதரவினாலும் I.I.T.(Delhi), மற்றும் I.I.T (Kanpur)  இன்னும் சில  தேசிய பயிற்சி கழகங்களில் பயிலும் வாய்ப்புக்கள் கிடைத்தது.

ஒரு கிராமத்துப் பையனுக்கு வானத்தை தொட்ட சந்தோசம்.

அப்புறம்....." இருக்கிற வேலையைவிட்டு விட்டு,பறக்கிற வேலையை  புடிக்குறா மாதிரி ",  வளைகுடா நாட்டுக்கு ஓடினேன். இதையெல்லாம் பத்தி பின்னாடி சொல்றேங்க ..
அதுவும் ஒரு பெரிய கதைங்க ..

ஏதோவொரு தாகம் ..எப்போதோ ஏற்றி வாய்த்த நெருப்பு ஊதிகிட்டே இருக்கணும் ..அவ்வளவு தாங்க..

பொறிகள் இன்னும் வரும் ...


நன்றி : கூகுள் படங்கள் .