தில்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தில்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும் ..6


மும்பை முதல் தில்லி..இரெண்டாம் கட்டம். 

செம்பட்டைத் தலை ,சிவந்த கண்கள் , ரயில் அழுக்குகளில் கணிசமாக   கனக்கின்ற, கசங்கிய உடை. பாலைவனத்தில் நாடோடியாய் ஒட்டகம் மேய்த்து, திரும்பிய தோற்றம். கடிகார முட்கள் வேகமாய் நகர, இனியும் காத்திருத்தல் பயன் இல்லை என்று, தொலைபேசியில் நண்பரின் அலுவலக தொடர்பு எண்ணைச் சுழற்றினோம் ." ட்ரிங் ,ட்ரிங்", என்பதற்கு  பதிலாய், ம்ம்.. ம்ம்.. என்று நீண்ட குரலில் அழுதது. மீண்டும், மீண்டும் இந்த ஒரு தலை ராகம்.விரல் வலிக்க ,தொலைபேசி, வெறும்  தொல்லைபேசியாய். வயிற்றுக்குள் ஜந்துக்கள் நெளிய ,ரெத்த நாளங்களின் அழுத்தத்தில், குருதிப் புனல் கூடி  நெற்றிப் பொட்டில், சம்மட்டி அடிகள்.

சூரியன் சற்றே அடிவானம் இறங்க, என் அடிவயிறு ரொம்பவும் கலங்கியது. அறிமுகமில்லா, புது இடம். தப்பு பண்ணிட்டோம். அப்படின்னு எப்போதும் போல, இக்கட்டான நேரத்தில் இடித்துரைத்தது, மனசாட்சி. நேரமில்ல!. இப்ப, அதோட தர்க்கம் பண்ண !. காணமல் போன பொருளை கண்டு பிடிக்க நினைவுகளின் வேர்களை தோண்டுறா மாதிரி, மனசு சம்பவக் கோர்வைகளை   பின் தொடர்ந்து பாக்குது. கொஞ்சம் நான் இதுக்காக, திரும்பவும் மும்பை போவணும்.கருவின் ஆரம்பம், அங்கேதான் .

வியாழன், 26 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும் ..5.


மும்பை யில் இருந்து தில்லி ..முதல் பயணம்.

“It is good to have an end to journey toward; but it is the journey that matters, in the end” ....By Ursula K.Leguin    
.

ஒவ்வொரு மனிதனும், காலத்தின் கட்டாயத்தில், எப்போதேனும் தன வாழ்க்கையில் வேறுபட்ட இடங்களுக்கு, மாறுபட்ட சூழலில் பயணிக்க நேரிடுகிறது. இந்த பயணங்களில்,சில மனதில் மகிழ்ச்சி எனும் மத்தாப்பு களையும், மற்றும் சில பயணங்கள் அச்சத்தையும், திகிலையும்,  அல்லது இன்னவென்று சொல்லத் தெரியாத   எண்ண  அலைகளை காலம் காலத்துக்கும் ஏற்படுத்தி விடுகிறது.


பசு மரத்து ஆணியாய் இவை   மனதில் பதிந்து, அவசரமாய் மேய்ந்து, பின் ஆர அமர அசை போடும் பசு போலவும், அவ்வப்போது மனக் குகையில் அதிர்வு கேட்ட வெளவால் வட்டமிட்டு வந்து அமர்தல் போலவும். குளத்தில் இட்ட கல் போல, விரிகின்ற வளையங்களாய் அலை எழுப்பி, பின் வலுவிழக்கின்றன. காலம்  கடுகிட,  தன்னில் சற்றே விலகி, தொலைவில் நின்று, புகை போன்று எழும்புகிற இந் நினைவுகளை  நோக்கின், பெரிதே நகைப்பையும்,சிறிதே  நாணத்தையும் கூட ஊட்டும்.