புதன், 8 செப்டம்பர், 2010

இரு சொட்டுக் கண்ணீர் ...

வைத்தியர் சொன்னார். வயிற்றில் புற்று நோய் என்று,
வாத்தியாராய் வாழ்வு.பலருக்கு வழி காட்டியவள்,
வாய்விட்டு அழுகிறாள் எமனிடம் வாய்தா கேட்டு,
வாசம் இன்று மருத்தவ மனையில்........

புற்று நீண்டதால், இன்று வாழ்கையில் பற்று நீங்கியது,
பாசம் இருந்தாலும், பெரும் பணம் கரைந்ததே மிச்சம்.
வலிகளும், வேதனைகளும், மரண விளிம்பின் உச்சத்தை தொட,
வலி மறக்க, மார்பைன் ஊசியில் மயங்கிப் போகிறாள், இத் தாய்.

எமனிடம் யாசிப்பதை விட்டு, தீர யோசித்ததில்,
எண்ணப்பட்டு, மிச்சம் இருக்கும் நாட்களில்,உணர்கிறாள்,
பலனோ, பயனோ இல்லை என்று. முடிவு. உயிர் துறக்க உண்ணாவிரதம்.
பசியில் உண்ணமுடியாமலும் ,உண்டது செரிக்காமலும்,
உடல் படும், உபாதையை விட உயிர் விடுவதே உத்தமம் என்று.

அரற்றிய ஆருயிர் கணவனும்,அழுகின்ற பிள்ளைகளும் ,
அன்னையின் துயரத்தை விட, மரணமே மேல் என்று,அமைதியாயினர்.
செவிலியர், இவளுக்கு புத்தாடை உடுத்தி, போட்டோ எடுக்க,
செந்நிறத்தில் இறக்கப் போகும் அன்னை,
இன்னுமே அழகாய் இருக்கிறாள்.

புத்தமார் பூசை செய்யவும்,சவப் பெட்டிக்கும்,
புனித சமாதிச் சடங்கிற்கும் ஆணையிட்டாள்.

வாழ்ந்த வாழ்க்கை,வசந்தங்கள், மழலையாய், மாணவியாய்,மனைவியாய்,
தாயாய், பள்ளிபருவம், பால நினைவுகள், மனதில் ஊஞ்சலாட,
நெஞ்சும் நினைவும் பின்னோக்கி அசை போட,
நேசமான மருத்துவ மனை, மௌனமாய் அஞ்சலியும்,
நெருக்கமான நெஞ்சங்களின், ஏராளமான பிரார்த்தனைகளும்,
சங்கடம் இன்றி, சாவு சட்டென்று வரவும், பரலோகம் அடையவும்.


இனம் புரியா வேதனை என்னை தீண்டுகிறது .கண்கள் பனிக்கின்றன,
இரு சொட்டுக் கண்ணீர்.   இப்போதும் என் கண்ணில்.
எப்போது நினைத்தாலும்.


( வாழ்க்கை வியாபாரத்தின் கூட்டல்,கழித்தல்களில்,இறுதிப் பயணப்

பாதை,  கல், முள்  இல்லாமல், கஷ்டங்கள் 

 குறைவாய்,சடுதியில் முடிவதே, நான்  சங்கரனிடம் வேண்டுவது. )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக