சனி, 27 நவம்பர், 2010

அப்பாவிடமிருந்து அனுபவப் பாடம்... (1)..



அப்பாவிடமிருந்து அனுபவப் பாடம்...(1)..

முதல் மரியாதை.

கிராமத்து நிலக்கிழார்,மணியக்காரர்,ஒப்பந்தக்காரர் என, பல அவதாரம் தரித்தவர்.என் தந்தை.தந்தையை "அய்யா என விளிப்பது எங்கள் வழக்கம்.ஏழு பிள்ளைகளில் இடையில் பிறந்தவன் நான். இது தவிர, எங்கள் பெரியப்பா பிள்ளைகள் சிலரும், எங்கள் வீட்டில் தங்கிப் படித்தனர். சகோதர, சகோதரிகள்,உறவினர் என, வீட்டில் எப்போதும் கூட்டம். கல கலப்பு.எங்கள் நெருங்கிய உறவினர் ஒருவர்,அண்ணன் முறை வேண்டும்.எங்கள் நிலங்களை  பார்க்கும்  கண்காணியாக இருந்தார்.காலையில் ஆட்களுக்கு இடவேண்டிய பணிபற்றிய  விவரம், என் தந்தையிடம் கேட்டு விட்டு, படியிறங்கிச் சென்றார்.என்னுடைய தந்தை மீண்டும் சில வேலைகளை, அவரிடம் சொல்வதற்காக  என்னை பார்த்து  "கேசவனைக் கூப்பிடு "'என்றார். நான் உடனே தெருவில் இறங்கி "கேசவா! கேசவா !", "அய்யா கூப்பிடறாங்க",என்றேன்,உரத்த குரலில்.

பளீரென்று முதுகில் ஓர் அடி.பொறி கலங்கிப் போயிற்று. திரும்பிப் பார்த்தால் கோபமாய் என் தந்தை. அவருக்கு என்ன வயது ?.அண்ணன் முறை. இப்படி விளிக்கலாமா? என்று.
சுமார் எட்டு வயதிருக்கும் எனக்கு அப்போது.

அன்றையில் இருந்து ,எந்த நிலையிலும் ,எக்காரணம் கொண்டும்  யாரையும் மரியாதையின்றி பேசுதல், நடத்துதல்  தவறு என்பது நான் உணர்ந்த பாடம். என் முதுகில் விழுந்த, என் தந்தையின் முதல் அடி, கற்றுத்  தந்த  பாடம்.

நன்றி :கூகுள் படங்கள்.                     

2 கருத்துகள்: